
புக்கிட் ஜாலில் – ஜூன்-15,
மலேசியாவின் முதன்மை திறன் மேம்பாட்டு முன்னெடுப்பான NTW எனப்படும் தேசிய பயிற்சி வாரம், நேற்று தொடங்கி வரும் ஜூன் 21-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
நாடு முழுவதும் நேரிலும் இயங்கலை வாயிலாகவும் 65,000-க்கும் மேற்பட்ட பயிற்சிகளில் இளையோர் இலவசமாக பங்கேற்கலாம்.
இதன் தொடக்க விழா நேற்று கோலாலம்பூர் புக்கிட் ஜாலில் விளையாட்டரங்கின் கார் நிறுத்துமிடத்தில் நடைபெற்றது.
இந்த 2-நாள் விழாவை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார். ஆர்வத்தோடு பங்கேற்ற மாணவர்களையும் பங்கேற்பாளர்களையும் அவர் பெரிதும் பாராட்டினார்.
மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம்மும் உடன் கலந்துகொண்டார்.
மலேசியா, 2025 ஆசியான் தலைமைப் பொறுப்பை ஏற்றிருப்பதை ஒட்டி, முதன் முறையாக அனைத்து ஆசியான் நாட்டவர்களுக்கும் இந்த NTW பயிற்சிகள் திறக்கப்பட்டுள்ளன.
AI அதிநவீன தொழில்நுட்பம், இலக்கவியல் உருமாற்றம், பசுமைத் தொழில்நுட்பம், தலைமைத்துவம், மென் திறன்கள் உள்ளிட்ட பயிற்சிகள் இதில் இலவசமாக வழங்கப்படும்.
இந்த 2025 NTW பயிற்சி வாரம், மனிதவள அமைச்சின் கீழ் இயங்கும் மனிதவள மேம்பாட்டுக் கழகமான HRD-யின் ஆதரவோடு நடைபெறுகிறது.
இவ்வட்டாரத்திலிருந்து 1 மில்லியன் பங்கேற்பாளர்களை இது ஈர்க்குமென எதிர்பார்க்கப்படுகிறது.