
புக்கிட் மெர்தாஜாம், மார்ச்-6-புக்கிட் மெர்தாஜாம் மருத்துவமனைக்கு வெளியே உள்ள இந்து கோவிலுக்கு அருகில் நாளை எந்த பேரணியும் நடைபெறாது என ஏற்பாட்டுக் குழு அறிவித்துள்ளது.
செபராங் தெங்கா மாவட்ட போலீஸ் தலைவர் Helmi Aris மற்றும் ஸ்ரீ தேவி முனீஸ்வரர் கோவில் நிர்வாகத்துடன் நடந்த கலந்துரையாடலுக்குப் பிறகு, அத்திட்டம் இரத்துச் செய்யப்பட்டதாக, Surplus பினாங்கு நலச் சங்கம் என்ற அரசு சார்ப்பற்ற அமைப்பின் தலைவர் Sophian Mohd Zain தெரிவித்தார்.
“சமூக ஊடகங்களில் அக்கோவில் குறித்து வைரலான பிறகு, அங்கு சென்று நிலவரங்களைக் காணவே நாங்கள் திட்டமிட்டோம்; ஆனால் நாளை அங்கு திருவிழா நடைபெறுவது எங்களுக்குத் தெரியாது” என்றார் அவர்.
“அதே சமயம், நாளை கோயிலை உடைக்கத் தான் ஆட்களை சேர்க்கிறோம் என இணையத்தில் தவறான போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது; அது உண்மையல்ல; AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அந்த போஸ்டரை உருவாக்கி யாரோ உலக விட்டுள்ளார்கள்” என Sophian கூறினார்.
அந்த போலி போஸ்டர் குறித்து போலீஸில் புகார் செய்யும் சாத்தியத்தையும் அவர் மறுக்கவில்லை.
இதனிடையே, இன்றைய முத்தரப்புச் சந்திப்பு சுமூகமான சூழலில் நடைபெற்றதாவும், நல்லிணக்கத்தை நிலைநாட்ட அனைவரும் உறுதிபூண்டிருப்பதாகவும் கோவில் தலைவர் எம். கார்த்திகேசன் தெரிவித்தார்.
இந்நிலையில், எவ்வித தடங்களுமின்றி நாளை பக்தர்கள் திருவிழாவில் பங்கேற்கலாம் என்றார் அவர்.
நாளை பேரணி நடத்தப்பட்டு, பொது அமைதியைக் குலைக்கும் வண்ணம் யாராவது நடந்துகொண்டாலோ, பொது மக்கள் அதில் பங்கேற்றாலோ கடும் நடவடிக்கைப் பாயும் என போலீஸ் முன்னதாக எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.



