
கோலாலம்பூர், ஏப்ரல்-21, தேர்தலில் வாக்களிக்கும் கடமையையும் ஹஜ் யாத்திரை கடமையையும் ஒப்பிட்டு, ஆளாளுக்கு தான் தோன்றித் தனமாக பேச வேண்டாமென, கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இஸ்லாமிய விவகாரங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ நாயிம், மொக்தார் அவ்வாறு கேட்டுக் கொண்டார்.
யாருடையப் பெயரையும் அவர் குறிப்பிடவில்லை என்றாலும், பாஸ் கட்சித் தலைவர் தான் ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் வெளியிட்டுள்ள சர்ச்சைக்குரிய பேச்சு பற்றிதான் அமைச்சர் பேசுகிறார் என்பது அனைவருக்கும் தெரியும்..
ஹஜ் கடமை உள்ளிட்ட சமய விதிகள் குறித்து யார் வேண்டுமானாலும் எதுவும் பேசி விட முடியாது; அதற்கென முஃப்தி, ஜாக்கிம் உள்ளிட்ட அதிகாரத் தரப்புகள் உள்ளன என்றார் அவர்.
இஸ்லாத்தின் கடமைகள் மற்றும் குடிமக்களின் ஜனநாயகக் கடமைகள் என்பது உணர்ச்சிப்பூர்வமான விஷயமாகும்.
எனவே, எதையாவது பேசி மக்களைக் குறிப்பாக முஸ்லீம்களைக் குழப்ப வேண்டாமென, டத்தோ நாயிம் அனைவரையும் கேட்டுக் கொண்டார்.
பேராக், ஆயர் கூனிங் சட்டமன்ற இடைத் தேர்தலில் ‘இஸ்லாம்’ வெற்றிப் பெறுவது முக்கியம் என்பதால், ஹஜ் யாத்திரையை தள்ளிப் போடுமாறு முன்னதாக ஹாடி அவாங் பேசியிருந்ததே பெரும் சர்ச்சையாகியுள்ளது.
இடைத் தேர்தல் வாக்களிப்பு ஏப்ரல் 26-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், 3 நாள் கழித்து ஹஜ் பயணம் தொடங்குகிறது.
என்றாலும், ‘இஸ்லாத்தின்’ வெற்றியை உறுதிச் செய்ய இடைத் தேர்தலுக்கே முஸ்லீம்கள் முன்னுரிமை வழங்க வேண்டுமென, மாராங் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹாடி கூறியிருந்தார்.
ஆட்சியும் அதிகாரமும் முஸ்லீம்களின் கையில் தான் இருக்க வேண்டும்; அவர்களை விட முஸ்லீம் அல்லாதோர் வலுவாக இருக்கக் கூடாது என்றும் அவர் சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்