
செப்பாங், மே 27 – கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையமான
KLIA 2 ஆவது முனையத்தில் மூன்றாவது மாடியில் Produa Alza எம்.பி.வி வாகனம் ஒன்று தீயில் அழிந்தது. இன்று காலை மணி 9.20 அளவில் நிகழ்ந்த அந்த சம்பவத்தின்போது அந்த வாகனத்தின் ஓட்டுநர் விமான நிலைய முனையத்தில் இருந்த தீயணைக்கும் கருவியின் மூலம் விரைந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அதே வேளையில் பொதுமக்கள் சிலரும் அங்கிருந்த தீயணைப்பு நீர் குழாயை பயன்படுத்தி தீயை அணைப்பதற்கு உதவியதாக KLIA மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் அஸ்மான் ஷாரியாட்
( Azman Shari’at ) தெரிவித்தார்.
அதோடு KLIA விமான நிலையத்தின் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து வந்துச் சேர்ந்த தீயணைப்பு வீரர்களும் உடனடியாக சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு வருகை புரிந்து அந்த வாகனத்தின் தீயை விரைவாக அணைத்து நிலைமையை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தனர். அந்த வாகனத்தில் தீ ஏற்பட்டதற்கான காரணம் குறித்து தீயைணப்புத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் குறித்து அந்த வாகனத்தின் உரிமையாளரும் போலீசில் புகார் செய்துள்ளார்.