
கோலா திரெங்கானு, ஜூன் 30 – கடந்த சனிக்கிழமையன்று புலாவ் பெர்ஹெந்தியான் தீவில் படகு கவிழ்ந்து 3 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு, அலட்சியமும் சட்டத்திட்டங்களை பின்பற்றாததே முக்கியம் காரணம் என்று சாடியுள்ளார் செனட்டர் டாக்டர் ஆர்.ஏ. லிங்கேஷ்வரன்.
இச்சம்பவத்தில் உயிரிழந்த ஆறுமுகம் சதிவேலோ மற்றும் அவரது மகள் சர்விகா ஆறுமுகம் ஆகியோரின் இறுதி சடங்கில், பினாங்கு மஇகா தலைவர் டத்தோ தினகரன் மற்றும் செனட்டர் லிங்கேஷ்வரன் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
படகில் இருந்த அனைத்து பயணிகளுக்கும் படகு ஓட்டுநர் லைஃப் ஜாக்கெட்டுகள் வழங்கவில்லை என்றும் இன்னும் சிறிது நேரத்தில் சென்றடைய வேண்டிய இடத்தை நெருங்கி விட்டதால் ஜாக்கெட்டுகள் தேவையில்லை என்றும் ஓட்டுநர் அலட்சியமாக பதிலளித்ததாக பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முழுமையான விசாரணையை நடத்த வேண்டுமென்றும் புலாவ் பெர்ஹெந்தியானுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்லும் அனைத்து படகுகளும் உரிமங்களைக் கொண்டிருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
கடுமையான பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றவதோடு , படகு ஓட்டுநர்கள் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் லிங்கேஸ்வரன் கூறியுள்ளார்.
இனி வரும் காலங்களில் இத்தகைய சம்பவங்கள் நடவாமலிருக்க சம்பந்தப்பட்ட தரப்பினர்கள் முன்கூட்டியே செயல்பட வேண்டும் என்றும் அலட்சிய போக்கினால் இனி எந்த உயிர்களும் இழக்கப்படக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.