
பூச்சோங், ஜூன்-4 – சிலாங்கூர், பூச்சோங், பூசாட் பண்டார் பூச்சோங் LRT இரயில் நிலையத்தில் தைவான் நாட்டைச் சேர்ந்த ஓர் ஆடவர் தண்டவாளத்தில் தவறி விழுந்து, ஓடும் இரயிலில் அரைபட்டு உயிரிழந்தார்.
நேற்று மாலை 6 மணிக்கு மேல் அச்சம்பவம் நிகழ்ந்தது.
தகவல் கிடைத்து சம்பவ இடம் விரைந்த தீயணைப்பு – மீட்புத் துறை, இரயில் பெட்டிக்கு அடியில் ஓர் ஆடவர் சுயநினைவின்றி கிடப்பதை கண்டது.
தண்டவாளத்திலிருந்து அவரை மேலே கொண்டு வந்த போது, அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதை மருத்துவக் குழு உறுதிப்படுத்தியது.
இதையடுத்து 63 வயது அந்நபரின் உடல் மேல் நடவடிக்கைக்காக போலீஸிடம் ஒப்படைக்கப்பட்டது.
அச்சம்பவத்தால் ஸ்ரீ பெட்டாலிங் வழித்தடத்தில் 4 LRT நிலையங்களில் சேவை பாதிக்கப்பட்டது.
புத்ரா ஹைட்ஸிலிருந்து வந்த இரயில்கள் பூச்சோங் பெர்டானா நிலையத்தோடு திருப்பி விடப்பட்டன; அதே சமயம் செந்தூல் தீமோரிலிருந்து வந்த இரயில்கள் கின்றாரா BK5 நிலையத்தோடு திரும்பின.
வேலை முடிந்து வீடு திரும்பும் நேரம் என்பதால் ஆயிரக்கணக்கான LRT பயணிகள் பாதிக்கப்பட்டனர்.
மாற்று ஏற்பாடாக பேருந்து சேவை வழங்கப்பட்ட போதும், குறிப்பாக கின்றாரா நிலையத்தில் பயணிகள் மணிக்கணக்கில் சிக்கித் தவித்த வீடியோக்களும் புகைப்படங்களும் முன்னதாக வைரலாகின.