
டாமான்சாரா, ஜூன்-3 – இந்தியப் பெண் தொழில்முனைவோர்களுக்கான P.E.N.N 2.0 திட்டத்திற்கு, அமானா இக்தியார் மலேசியா கூடுதலாக 50 மில்லியன் ரிங்கிட் நிதியை ஒதுக்கியுள்ளது.
இதையடுத்து 10,000-க்கும் மேற்பட்ட இந்தியப் பெண் தொழில்முனைவர்களின் கரங்களை வலுப்படுத்த, இதுவரை மொத்தமாக 100 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த P.E.N.N 2.0 திட்டத்தை, தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துறை துணையமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இன்று தொடக்கி வைத்தார்.
பண்டார் ஸ்ரீ டாமான்சாரா, அமானா இக்தியார் மலேசியா தலைமையக வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், அதன் அறங்காவலர் வாரிய உறுப்பினர் நஜீப் மொஹமட் நூரும் பங்கேற்றார்.
இதனிடையே நிதி திட்டங்கள், பயிற்சி பட்டறைகள், கடன் உதவிகள் குறித்து SME வங்கி மண்டல இயக்குனர் Dato Zulkarnain Othman, Pernas Franchise நிறுவன தலைவர் Dr. Hafizi, Tekun Nasional நிர்வாகி பாலகுரு குருபாதம், மற்றும் Insken பிரதிநிதி Faiz Azlan ஆகியோரும் விளக்கமளித்தனர்.
பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டத்தோ ஸ்ரீ ரமணன், அமானா இக்தியார் மலேசியாவின் இந்த வாய்ப்பை இந்தியப் பெண் தொழில்முனைவர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.
இவ்வேளையில், இத்திட்டத்தில் கடனுதவிப் பெற்ற பெண் தொழில்முனைவர்களில் சிலர், வணக்கம் மலேசியாவிடம் தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டனர்.
6,000-க்கும் மேற்பட்ட பெண்கள் பயனடைந்த P.E.N.N 1.0 திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து இந்த P.E.N.N 2.0 திட்டம் தொடங்கப்பட்டுள்ளது