
கோலாலம்பூர், ஜூன் 24- வடக்கு – தெற்கு நெடுஞ்சாலையில் பாங்கிற்கு அருகே இரண்டு வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் ம.இ.கா உதவித் தலைவர் டத்தோ T. முருகையாவுக்கு கழுத்து, உடல் மற்றும் கைகளில் காயம் ஏற்பட்டுள்ளது.
நேற்று முன் தினம் ஜோகூரில் ம.இ.கா-வின் பக்ரி தொகுதி ஆண்டுக் கூட்டத்தை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்த பின் தனது காரில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது பிரதமர் துறையின் முன்னாள் துணையமைச்சருமான முருகையா இரவு மணி 8.30 அளவில் விபத்தில் சிக்கினார்.
முன்னே சென்று கொண்டிருந்த வாகனம் இயந்திர கோளாறினால் திடீரென நின்றதைத் தொடர்ந்து அதனை மோதுவதற்கு முருகையாவின் தனிப்பட்ட கார் ஓட்டுனர் தவிர்க்க முயன்றபோது இந்த சம்பவம் நடந்ததாக அவரது அலுவலகம் கூறியுள்ளது.
இந்த விபத்தை தவிர்க்க முயன்றபோது பல முறை கார் சுழன்ற பின்னரே கார் ஓட்டுனர் வாகனத்தின் கட்டுப்பாட்டை மீண்டும் பெறமுடிந்தது.
இந்த சம்பவத்திற்குப் பின் முருகையா வீடு திருப்பியபோதிலும் அவரது கழுத்தில் தொடர்ந்து வலி ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.