
அலோர் ஸ்டார், மே-7- அரச மலேசிய ஆகாயப்படையான TUDM-க்குச் சொந்தமான விமானமொன்றை உட்படுத்திய சம்பவத்தால் நேற்று மாலை தற்காலிகமாக மூடப்பட்டிருந்த கெடா, அலோர் ஸ்டார் சுல்தான் அப்துல் ஹலிம் விமான நிலைய ஓடுபாதை, இரவு 8 மணிக்கு மீண்டும் திறக்கப்பட்டது.
முன்னதாக மாலை 5 மணிக்கு தரையிறங்கும் போது TUDM-மின் Hawk இரக போர் விமானம் தடம்புரண்டு ஓடு பாதையை விட்டு விலகியது.
இதையடுத்து, விமானத்தை அப்புறப்படுத்தவும், அவ்விடத்தைத் துப்புரவுப்படுத்தவும் ஏதுவாக மாலை 5.30 மணிக்கு விமான ஓடுபாதை மூடப்பட்டது.
அனைத்தும் நிறைவடைந்து பரிசோதனைகளும் முழுமைப் பெற்றதால், கணிக்கப்பட்டதை விட முன்கூட்டியே இரவு 8 மணிக்கு ஓடுபாதை திறக்கப்பட்டது.
அச்சம்பவத்தால் பாதிக்கப்பட்ட 4 விமானப் பயணங்களின் அட்டவணையும் இரவோடு இரவாக மாற்றியமைக்கப்பட்டன.
ஹஜ் யாத்ரீகர்களை ஏற்றிச் செல்ல வேண்டிய விமானப் பயணமும் அதிலடங்கும்.
லீமா கண்காட்சிக்கான ஒத்திகையில் ஈடுபட்டிருந்த போது அந்த Hawk விமானத்தின் தரையிறங்கும் கியரில் ஏற்பட்ட கோளாறால் அது ஓடுபாதையை விட்டு விலகியது.
எனினும் அதில் விமானிக்குக் காயமேதும் ஏற்படவில்லை.