
ஜாசின் , ஜன 19 – நாட்டில் அதிக அளவில் திவால்நிலையை பதிவு செய்துள்ள மாநிலமாக சிலாங்கூர் விளங்குவதோடு கணிசமான அளவு அரசு ஊழியர்கள், குறிப்பாக ஆசிரியர்கள் இருப்பதாக மலேசிய திவால்துறையின் தரவுகள் தெரிவிக்கின்றன.
ஆசிரியர்கள் போன்ற நிலையான வருமானம் உள்ள நபர்கள் பெரும்பாலும் கடன்களுக்கு எளிதாக அங்கீகரிக்கப்படுகின்றனர். ஆனால் விவேகமான சிக்கன செயல்திட்டமின்றி அவர்கள் அதிக நிதி நெருக்கடியை எதிர்நோக்குகின்றனர் என திவால்துறையின் தலைமை இயக்குநர் டத்தோ இஷாக் பக்ரி ( Ishak Bakri ) கூறினார்.
கடன் வாங்குவதற்கு உதவும் அவர்களின் வருமானத்தின் நிலைத்தன்மையே, கடன் சுமைகள் அதிகரிக்கும்போது நீடித்த நிதிச் சிக்கலுக்கு வழிவகுக்கிறது.
கடந்த ஆண்டு 200,000 பேர் திவால்நிலையிலிருந்து வெற்றிகரமாக விடுவிக்கப்பட்டதாகவும், இது அரசாங்கத்தின் முக்கிய அடைவு நிலையைவிட அதிகமாகும் என இஷாக் சுட்டிக்காட்டினார்.
2023 ஆம் ஆண்டின் திவால் சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தத்தினால் மனுத்தாரர்கள் குறிப்பிட்ட அளவுகோல்களைப் பூர்த்தி செய்தால், நீதிமன்ற உத்தரவு இல்லாமல் திவால் நெருக்கடியிலிருந்து விடுவிப்பதற்கு தலைமை இயக்குநருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.



