
கோலாலாம்பூர், ஏப்ரல்-9-போலீஸ் அதிகாரி ஒருவரின் தலைமையில் இயங்கி வந்ததாக சந்தேகிக்கப்படும் ஆயுதமேந்தியக் கொள்ளைக் கும்பல் முறியடிக்கப்பட்டுள்ளது.
இந்நடவடிக்கையில், அந்த அதிகாரி உட்பட மொத்தம் 6 பேர் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.
அந்த போலீஸ் அதிகாரி போதைப்பொருள் குற்றத்திற்காக ஏற்கனவே பணி இடைநீக்கம் செய்யப்பட்டவர் என, கோலாலாம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ Fadil Marsus கூறினார்.
போலீஸ்காரர்களாக ஆள்மாறாட்டம் செய்து பல கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ள இக்கும்பல், கெப்போங் வட்டாரத்தில் வெளிநாட்டவர்களின் குடியிருப்புகளையும் குறி வைத்து செயல்பட்டுள்ளது.
அப்படி செந்தூல் மாவட்டத்தில் 2 பெண்கள் உள்ளிட்ட 3 சீனப் பிரஜைகள் மற்றும் ஒரு இந்தோனேசியப் பெண் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பணக்காரரர்களின் வீடுகளாகப் பார்த்து கொள்ளையிடுவதே இவர்களின் பாணியாகும்; அவ்வகையில் இவர்கள் வீடு புகுந்து கொள்ளையிட்டதில் ஆடம்பரக் கார்கள், ரொக்கப் பணம், நகைகள், தங்கக் கட்டிகள், பாதுகாப்புக் பெட்டகம், வெளிநாட்டு நாணையங்கள், கைப்பேசிகள் என மொத்தம் 4.4 மில்லியன் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டுள்ளது.
அவற்றில் பெரும்பாலானவை பறிமுதல் செய்யப்பட்டு விட்ட நிலையில், கைதான அனைவரும் 7 நாட்கள் விசாரணைக்காத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.



