
பாயான் லெப்பாஸ், மே-23 – நாய் கூண்டில் அடைக்கப்பட்டது உட்பட பெற்றோரால் மோசமான சித்ரவதைக்கு ஆளான 6-ஆம் வகுப்பு மாணவனின் துயரங்கள், ஆலோசக ஆசிரியரின் தயவால் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
பினாங்கு பாயான் லெப்பாஸில் இச்சம்பவம் நடந்துள்ளது.
வகுப்பில் மாணவன் எப்போதும் வலியோடு இருப்பதை கண்டு சந்தேகப்பட்ட ஆசிரியர் அவனை பரிசோதித்துள்ளார்.
அப்போது, முதுகிலும் பிட்டத்திலும் வீக்கத் தளும்புகள் இருந்தது கண்டு அவர் அதிர்ச்சியுற்றார்.
மாணவனை விசாரித்ததில், பெற்றோர் தன்னை அடிக்கடி அடித்து துன்புறுத்துவதாகவும், ஈராண்டுகளுக்கு முன்னர் நாய் கூண்டில் கூட அடைத்து வைத்ததாகவும் அவன் கூற, ஆசிரியர் திகைத்துப் போனார்.
இதையடுத்தே சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர் இது குறித்து புகாரளித்ததாக, பாராட் டாயா மாவட்ட போலீஸ் தலைவர் துணை ஆணையர் சசாலீ அடாம் கூறினார்.
49, 47 வயதிலான தந்தையும் தாயும் விசாரணைக்காகத் தற்போது கைதாகியுள்ளனர்.
தொடக்கக் கட்ட விசாரணையில், சுங்கை ஆராவில் உள்ள வீட்டில் துணி அலமாரியில் சாப்பாட்டை வைத்ததற்காக, கடந்த ஞாயிற்றுக்கிழமைக் கூட மகனை அவர்கள் பிரம்பால் அடித்தது தெரிய வந்தது.
அந்த பிரம்பும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவன் பினாங்கு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளான்.
உடல் நலம் தேறியதும் அவன் சமூக நலத்துறையான JKM-மின் பராமரிப்பில் வைக்கப்படுவான்.