
கோலாலாம்பூர், மார்ச்-18-16 ஆண்டுகளுக்கு முன் மதம் மாறிய தனது முன்னாள் கணவரால் கடத்திச் செல்லப்பட்ட மகளைக் கண்டுபிடிக்கத் தவறியதாகக் கூறி, தேசியப் போலீஸ் படைத் தலைவர் அலுவலகத்திற்கு எதிராக, எம். இந்திரா காந்தி நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்துள்ளார்.
இந்திராவின் முன்னாள் கணவர் முஹமட் ரிடுவான் அப்துல்லாவை கைதுச் செய்து, 11 மாத குழந்தையாக இருந்த போது கடத்தப்பட்ட மகள் பிரசன்னா தீக்க்ஷாவை மீட்குமாறு, 2014-ஆம் ஆண்டில் ஈப்போ உயர்நீதிமன்றம் போலீஸுக்கு உத்தரவிட்டிருந்தது.
ஆனால், இத்தனை ஆண்டுகளாகியும் அந்த உத்தரவு இதுவரை அமுல்படுத்தப்படவில்லை.
உயர் நீதிமன்றமே உத்தரவிட்டும், அதை செயல்படுத்துவதில் IGP அலுவலகம் அக்கறைக் காட்டாதது போல் இருப்பதால், இந்திரா ஏமாற்றமடைந்துள்ளார்.
எனவே, நீதிமன்றத்தை அவமதிப்பு செய்ததாகக் கூறி, கடந்த டிசம்பரில் அவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
வரும் ஏப்ரல் 24-ஆம் தேதி அது விசாரணைக்கு வரவுள்ளதாக, இந்தியா காந்தியின் வழக்கறிஞர் கூறினார்.
ஏப்ரல் தொடக்கத்தில் பிரசன்னா 18 வயதை எட்டுகிறார்; அதன்பின், குழந்தைச் சட்டத்தின் கீழ் இந்திராவுக்கு சட்டரீதியான உரிமை குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.



