
கோலாலம்பூர், ஏப்ரல்-8-மசூதியில் அரசியல் பேசியதாகக் கூறப்பட்ட பொய்யான குற்றச்சாட்டுகள், தனது நற்பெயருக்குப் பெரும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகத், தொடர்புத் துறை அமைச்சர் டத்தோ ஃபாஹ்மி ஃபாட்சில் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
கடந்தாண்டு சிலாங்கூர், ரவாங்கில் உள்ள ஒரு மசூதியில் தாம் அரசியல் பிரச்சாரம் செய்ததாகப் பரப்பப்பட்ட தகவல்கள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என நேற்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் அவர் சாட்சியமளித்தார்.
இச்சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலானதால், பொது மக்கள் மத்தியில் தனது நற்பெயர் கடுமையாகப் பாதிக்கப்பட்டதாகவும், தாம் ஒரு மக்கள் பிரதிநிதி மற்றும் அமைச்சர் என்ற முறையில் பொது மக்களின் அவமதிப்புக்கு உள்ளானதாகவும் அவர் வருத்தம் ஏமாற்றமும் தெரிவித்தார்.
உண்மையில் தாம் தொழுகைக்காகவே அங்குச் சென்றதாகவும், அப்போது மசூதி நிர்வாகம் கேட்டுக் கொண்டதன் பேரில் ஒரு இசை நிகழ்ச்சி இரத்துச் செய்யப்பட்டது குறித்து விளக்கம் அளித்து மட்டுமே பேசியதாகவும் அவர் தெளிவுபடுத்தினார்.
ஏற்கனவே இரண்டு நபர்களுடனான வழக்கு சமரசத்தில் முடிவடைந்த நிலையில், தற்போது சுயேட்சை சமய சொற்பொழிவாளர் Ahmad Dusuki Rani என்பவருக்கு எதிராக தாம் தொடர்ந்துள்ள அவதூறு வழக்கில் தான் ஃபாஹ்மி அவ்வாறு சொன்னார்.
மீள முடியாத அளவுக்குத் தனது நற்பெயருக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறியுள்ள ஃபஹ்மி, இதற்காக Dusuki-யிடம் நஷ்ட ஈடு கோரியுள்ளார்.
வழக்கு விசாரணை இன்று தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.



