
கோலாலாம்பூர், ஜூன்-5 – பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் அமைச்சரவையில் சேரப்போவதாக வெளியான வதந்திகள் குறித்து, சுகாதாரத் துறை முன்னாள் அமைச்சர் கைரி ஜமாலுடின் தொடர்ந்து மௌனம் காத்து வருகிறார்.
கேள்விக்கு நேரடியாக பதிலளிக்காத கைரி, வானொலி அறிவிப்பாளராகவும், போட்காஸ்டராகவும் வாழ்க்கையை தாம் மகிழ்ச்சியாக கழித்து வருவதாகவும், இதை விட்டு நான் செல்ல வேண்டுமா என்றும் மறுகேள்வு எழுப்பினார்.
பி.கே.ஆர் கட்சியில் தோல்வி கண்டதை அடுத்து அமைச்சரவையிலிருந்து விலகுவதாக பொருளாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரஃபிசி ரம்லியும், இயற்கை வளம் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கான அமைச்சர் நிக் நஸ்மி நிக் அஹ்மாட்டும் அண்மையில் அறிவித்திருந்தனர்.
இதையடுத்து அவ்விரண்டு இடங்களை யார் நிரப்புவார்கள் என்ற யூகங்கள் எழுந்து வருகின்றன.
ரெம்பாவ் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கைரியும் அமைச்சரவையில் இணையலாமென கடந்த ஒரு வாரமாகவே பேசப்பட்டு வருகிறது.
ஆனால் இப்போதைக்கு அமைச்சரவையில் மாற்றமில்லை என டத்தோ ஸ்ரீ அன்வார் பல முறை தெளிவுப்படுத்தி விட்டார்; இருந்தும் யூகங்களைத் தடுக்க முடியவில்லை.
Hot Fm மலாய் வானொலியின் அறிவிப்பாளராகவும், Keluar Sekejap போட்காஸ்டராகவும் உள்ள 49 வயது கைரி, ஆகக் கடைசியாக டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சாப்ரி அமைச்சரவையில் சுகாதார அமைச்சராக இருந்தார்.