
கோலாலம்பூர், ஜனவரி 23 – மது அருந்தி விட்டு கார் ஓட்டிய 21 வயதுடைய ஆடவர், இஸ்தானா நெகாரா நுழைவாயிலிலுள்ள பாதுகாப்பு தடுப்பில் மோதிய சம்பவத்தைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டுள்ளார். அவர்மீது இன்று வழக்கு தொடரப்பட உள்ளது.
கோலாலம்பூர் போக்குவரத்து அமலாக்கம் மற்றும் விசாரணைத் துறை தலைவர், Assistant Commissioner Mohd Zamzuri Mohd Isa தெரிவித்ததன்படி, இந்த விபத்து இன்று அதிகாலை Jalan Changkat Semantan பகுதியில் நடைபெற்றது என்று குறிப்பிட்டார்.
புக்கிட் டாமான்சாரா பகுதியிலிருந்து வந்த டொயோட்டா வியோஸ் கார், தவறான பாதையில் சென்று, இஸ்தானா நெகாரா கேட் 2 பகுதியில் உள்ள பாதுகாப்பு கம்பம் மற்றும் தடுப்பு கதவின் மீது மோதியது. இந்த விபத்தில் யாருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை. ஆனால், கார் முன்பகுதியும் நுழைவாயிலில் உள்ள பாதுகாப்பு அமைப்புகளும் சேதமடைந்தன.
சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை நடத்தி, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, ஓட்டுநரின் வாக்குமூலத்தைப் பதிவு செய்தனர். மேலும் போலீசார் மேற்கொண்ட பரிசோதனையில் அனுமதிக்கப்பட்ட அளவை காட்டிலும் அந்நபரின் ரத்தத்திலுள்ள மதுவின் அளவு அதிகமாயிருந்தது.
இதையடுத்து, போலீசார் இவ்வழக்கை சாலை போக்குவரத்து சட்டத்தின் கீழ் பதிவுச் செய்து மேல் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.



