
மலாக்கா, மே 27 – அண்மையில் மலாக்காவிலுள்ள 2 ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் ‘மது விருந்து’ நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மலாக்கா இஸ்லாமிய மதத் துறை (JAIM), அத்தங்கும் விடுதிகளின் ‘ஹலால்’ சான்றிதழ்களை உடனடியாக ரத்து செய்துள்ளது.
அவ்விருந்து நிகழ்வில், ‘ஹலால்’ சான்றளிக்கப்பட்ட, தங்கும் விடுதிகளின் சமையலறை பாத்திரங்களும் உபகரணங்களும் பயன்படுத்தப்பட்டதை அறிந்த பொதுமக்கள் JAIM-க்கு கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதென்று மாநில கல்வி, உயர்கல்வி மற்றும் மத விவகார EXCO, டத்தோ ரஹ்மத் மாரிமான் (Datuk Rahmad Mariman) கூறியுள்ளார்.
இரத்து செய்யப்பட்ட சான்றிதழைத் திரும்ப பெற, அவ்விரு தங்கும் விடுதிகளுக்கும் 3 மாத கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், சம்பந்தப்பட்ட அவகாசத்தில் அவர்களின் செயல் திருப்திகரமாக இல்லையெனில் மலாக்கா இஸ்லாமிய மதத்துறை அவ்விண்ணப்பத்தை நிராகரிக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இவ்விவகாரத்தைக் கருத்தில் கொண்டு, மாநில அரசின் உறுதிப்பாடுகளுக்கினங்க , ஹலால் சான்றிதழ்களைப் பெற்ற வணிகத்தினர்கள், மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டுமென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.