
கோலாலம்பூர், செப்டம்பர் 3 – தனது மனைவியின் நீதிமன்ற வழக்கிற்கான செலவுகளை ஈடுகட்டுவதற்காக 84,500 ரிங்கிட்டை முறைகேடாக பயன்படுத்திய குற்றத்திற்காக மலாக்காவில் உள்ள ஒரு பொது பல்கலைக்கழகத்தின் கல்வி பணியாளர்கள் சங்கத்தின் செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
47 வயதான அந்த நபர், தனது மனைவிக்கு எதிரான நீதிமன்ற உத்தரவு மற்றும் அவரது நீதிமன்ற வழக்கிற்கான கட்டணத்தை செலுத்துவதற்காக சங்கத்தில் தனது பதவியை தவறாகப் பயன்படுத்தி அந்த பணத்தை பெற்றதாக ஒரு வட்டாரம் தெரிவித்தது.
அந்த சந்தேக நபர் நேற்று மாலை மணி 5.10 அளவில் மலாக்காவில் உள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமையகத்தில் வாக்குமூலம் அளித்த பின்னர் கைது செய்யப்பட்டார். அவரை செப்டம்பர் 7 ஆம் தேதி வரை தடுத்து வைக்க ஆயர் கெரோ மாஜிஸ்திரேட் நீதிமன்றம் எம்.ஏ.சி.சிக்கு அனுமதி அளித்தது. அந்த நபர் கைது செய்யப்பட்டதை மலாக்கா எம்.ஏ.சி.சி தலைவர் அடி சுபியன் ஷாபி உறுதிப்படுத்தினார்.