
சுபாங் ஜெயா; ஏப்ரல் 21 – கடந்த வியாழக்கிழமை இங்குள்ள பூச்சோங் பெர்மாய் உணவகத்தில், வேறொருவரின் மனைவிக்குத் தொந்தரவு செய்ததாக நம்பப்படும் ஆடவன் ஒருவனை, கும்பல் ஒன்று தாக்கியதில் அந்நபர் காயமடைந்தார்.
இது குறித்து கருத்துரைத்த, சுபாங் ஜெயா மாவட்ட காவல்துறை உதவி ஆணையர் வான் அஸ்லான் வான் மாமட், சம்பந்தப்பட்ட ஆடவன் தன் நண்பரை சந்திக்கச் சென்றபோது, திடீரென அடையாளம் தெரியாத கும்பலால் தாக்கப்பப்பட்டிருப்பதாக கூறினார். இச்சம்பவம் கடந்த வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் நிகழ்ந்ததுள்ளது.
அந்தக் கைகலப்பில், அந்த கும்பலிலிருந்த ஒரு ஆடவன் என் மனைவிக்கா தொல்லை கொடுக்கிறாய் என குற்றம் சாட்டி தாக்கியுள்ளான். இச்சம்பவத்தில் , பாதிக்கப்பட்ட ஆடவனின் முகம் வீங்கியது.
இதனிடையே, 18 முதல் 35 வயதிற்குட்பட்ட நான்கு நபர்கள் இச்சம்பவம் தொடர்பில் கைதாகினர். அவர்களில் ஒருவன் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளான்.
இருப்பினும், பாதிக்கப்பட்டவர் தான் செய்த புகாரை மீட்டுக் கொண்டதைத் தொடர்ந்து, சந்தேக நபர்களைத் தடுத்து வைக்கும் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. ஆயினும், விசாரணை ஆவணங்கள் முடிக்கப்பட்டு, மேலதிக அறிவுறுத்தல்களுக்கிணங்க துணை அரசு வழக்கறிஞரிடம் பரிந்துரைக்கப்படும், என்றும் அவர் கூறினார்.