
மலாக்கா, மார்ச்-18 – மலாக்கா, ஷா பண்டாரில் சாலை சமிக்ஞை விளக்குப் பகுதியில் மோட்டார் சைக்கிளோட்டியைத் தாக்கிய ஆடவர் கைதுச் செய்யப்பட்டார்.
கோத்தா ஷா பண்டாரில் ஞாயிறு பிற்பகல் 3 மணிக்கு கைதான 25 வயது அந்நபர், வாக்குமூலம் பதிவுச் செய்யப்பட்டதும், மருத்துவக் காரணங்களுக்காக விடுவிக்கப்பட்டார்.
மலாக்கா தெங்கா போலீஸ் அதனை உறுதிப்படுத்தியது.
அன்று அதிகாலை 2 மணிக்கு, தனது Toyota Vellfire காரிலிருந்து இறங்கிய அந்நபர், முன்னே நின்றிருந்த மோட்டார் சைக்கிளோட்டியை நெருங்கி அவரின் தலையில் குத்தினார்.
இதனால் சினமடைந்த மோட்டார் சைக்கிளோட்டி உடனே அந்தக் காரோட்டியைப் பிடித்து தள்ளினார்.
அங்கிருந்த மற்ற வாகனமோட்டிகளும் பொது மக்களும் சண்டையை விலக்கி விட, காரோட்டி அங்கிருந்து தப்பிச் சென்றார்.
47 வினாடி வீடியோ வாயிலாக வைரலான அச்சம்பவத்தின் போது, அந்நபர் மதுபோதையில் இருந்ததாக நம்பப்படுகிறது.