
கோலாலம்பூர், ஜூலை-14-கோலாலம்பூரில் உள்ள ஐக்கிய நாடுகள் அகதிகள் ஆணையத்தின் (UNHCR) அலுவலகத்தில் தற்போது 219,000-க்கும் மேற்பட்டோர் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இவ்வாண்டு ஏப்ரல் மாத நிலவரப்படி, இவர்களில் 66,493 பேர் புகலிடம் கோரியவர்கள் என்றும், 152,979 பேர் அகதிகள் என்றும் துணைப் பிரதமர் Datuk Seri Ahmad Zahid Hamidi தெரிவித்தார்.
பதிவு செய்யப்பட்டவர்களில் 100,184 பேர் ஆண்கள். 50,474 பேர் பெண்கள். அதோடு 35,345 ஆண் குழந்தைகளும், 33,469 பெண் குழந்தைகளும் இருக்கின்றனர். அவர்கள் மியன்மார், சிரியா, பாகிஸ்தான், ஏமன் மற்றும் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட சுமார் 60 நாடுகளைச் சேர்ந்தவர்கள் என Zahid Hamidi நாடாளுமன்றத்தில் கூறினார்.
அகதி மற்றும் தஞ்சம் கோருபவர் அந்தஸ்து வழங்கும் நடைமுறை, அமைச்சு, துறைகள் அல்லது அரசு நிறுவங்கள் தலையீடு இன்றி UNHCR அலுவலகத்தால் மட்டுமே முழுமையாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அரசாங்கம் அகதி அந்தஸ்தைச் சரி பார்ப்பதோ, தீர்மானிப்பதோ இல்லை. UNHCR அலுவலகமே அனைத்தையும் கவனித்து வருகிறது. எனவே , பதிவு செய்யப்பட்ட எண்ணிக்கை அகதிகள் மற்றும் தஞ்சம் கோருவோரின் உண்மையான எண்ணிக்கையைப் பிரதிபலிக்காமல் இருக்கலாம் என துணைப் பிரதமர் தெளிவுபடுத்தினார்.



