
கோவை, டிசம்பர்-27 – தி.மு.க ஆட்சியை அகற்றும் வரை இனி காலில் செருப்பு அணிய மாட்டேன் என, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அதிரடியாக அறிவித்துள்ளார்.
அதோடு வீட்டின் முன் தன்னைத் தானே 6 முறை சாட்டையால் அடித்துக் கொள்ளப் போவதாகவும் கூறி அவர் பரபரப்பைக் கிளப்பினார்.
இனி தமிழக அரசியலில் எனது விஷ்வரூபத்தைப் பார்ப்பீர்கள் என, அண்ணாமலை பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை சம்பவம் குறித்து கோவையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் வீராவேசமாகப் பேசினார்.
அடுத்த 48 நாட்களுக்கு முருகனுக்கு விரதம் இருக்கப் போவதாகவும் அவர் சொன்னார்.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை; பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பில்லை.
இந்த வன்கொடுமை சம்பவத்தில் சம்பந்தப்பட்ட நபர் தி.மு.கவுடன் தொடர்பு வைத்துள்ளார்.
இந்நிலையில் FIR முதல் தகவல் அறிக்கை கசிந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதற்குப் பொறுப்பேற்று போலீஸ் ஆணையர் பதவி விலக வேண்டுமென்றும் அண்ணாமலை வலியுறுத்தினார்.
தான் சொன்னபடியே, செய்தியாளர் சந்திப்பு முடிந்ததும் அண்ணாமலை தனது செருப்பைப் கழற்றி விட்டு நடந்துச் சென்றார்.
சென்னை அண்ணாமலை பல்கலைக்கழக வளாகத்தில் டிசம்பர் 23-ஆம் தேதி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகக் கூறி மாணவி ஒருவர் முன்னதாக புகார் செய்திருந்தார்.
கிறிஸ்மஸ் நாளன்று சந்தேக நபர் கைதுச் செய்யப்பட்டு 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுச் செய்யப்பட்டது.
இந்நிலையில் அவ்விளம் பெண் கொடுத்த FIR புகார் சமூக ஊடகங்களில் கசிந்து, அவரின் தனிப்பட்ட விவரங்களும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.