
பாங்கி, ஏப்ரல்-6-மலேசிய இந்திய உயர் கல்விக் கூட மாணவர்களின் விளையாட்டுத் திறமையைத் வெளிப்படுத்தும் முக்கிய மேடையாக, பாங்கி, மலேசியத் தேசியப் பல்கலைக்கழகமான UKM_மில் மாவீரன் 3.0 – பல்கலைக் கழகக் கிண்ணப் போட்டி, வெகு சிறப்பாக நடைபெற்றது.
“துணிவான நடை, வீறுகொண்டு எரியும் உற்சாகம்” என்ற கருப்பொருளில் மூன்றாவது முறையாக நடைபெற்ற இப்போட்டியை, UKM கபடி கிளப் மற்றும் ம.இ.காவின் மாஜூ கல்வி மேம்பாட்டுக் கழகமான MIED ஒத்துழைப்பில், இந்திய மாணவர் பிரதிநிதித்துவச் சபை ஏற்பாடு செய்தது.
நேற்று காலை 6 மணி முதல் மாலை 7.30 மணி வரை நடைபெற்ற இப்போட்டியில், பூப்பந்து, கபடி, கால்பந்து ஆகிய 3 விளையாட்டுகளில் 10 பல்கலைக்கழகங்களிலிருந்து 500 முதல் 600 மாணவர்கள் பங்கேற்றனர்.
மலேசியத் தொழில்நுட்பப் பல்கலைக் கழகமான UTM, 22 புள்ளிகளுடன் மொத்த சாம்பியன் பட்டத்தை வென்று, சுழல் கிண்ணத்தைத் தட்டிச் சென்றது.
அந்தந்தப் பிரிவுகளில் வெற்றியாளர்கள் போக, சிறப்பு விருதுகளும் வழங்கப்பட்டன.
கால்பந்துப் போட்டியில் சிறந்த வீரராக UTM-மின் கேவிந்த் தினகரன், கபடி பெண்கள் பிரிவில் சிறந்த வீராங்கனையாக UPM-மின் கவிஷா, ஆண்கள் பிரிவில் UTM-மின் ஜனஹன் உள்ளிட்டோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
நிறைவு விழாவில் ம.இ.காவின் விளையாட்டுக் குழுவின் தலைவர் அண்ட்ரூ டேவிட், கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஸ் சம்புநாதன், UKM மாணவர் விவகார மையத்தின் துணை இயக்குநர் Dr. Ahmad Firdhaus, UKM இந்திய முன்னாள் மாணவர் சங்கத்தின் தலைவர் சுந்தரராஜன் கோவிந்தன் மற்றும் MIFA எனப்படும் மலேசிய இந்தியர் கால்பந்து சங்கத்தின் பிரதிநிதியான ஓய்வுப் பெற்ற ASP ராஜேந்திரன் கண்ணையா விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
பல்கலைக் கழக மாணவர்களின் பங்கேற்பு இம்முறை மிகவும் ஊக்கமளிக்கும் வகையில் இருந்ததாக, அண்ட்ரூ டேவிட் வணக்கம் மலேசியாவிடம் கூறினார்.
இதுபோன்ற போட்டிகள், நம் மாணவர்களின் விளையாட்டுத் திறமையை வெளிக்கொணரும் நல்ல மேடை என, பிரகாஸ் சம்புநாதன் சொன்னார்.
போட்டி ஏற்பாடு குறித்து, UKM இந்திய மாணவர் பிரதிநிதித்துவச் சபையின் தலைவர் முகேந்திரன் ராமசந்திரனும், மாவீரன் 3.0 திட்ட இயக்குநர் கிருத்திகன் மகாலிங்கமும் மனநிறைவுத் தெரிவித்தனர்.
துணிவு, ஒற்றுமை, மற்றும் விளையாட்டு மனப்பாங்கை வலியுறுத்தி நடைபெற்ற இந்த மாவீரான் 3.0 போட்டி, இந்திய மாணவர்களின் விளையாட்டுத் திறமைகளை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.
இதோடு நின்று விடாமல், தேசிய அளவில் விளையாட்டு வீரர் – வீராங்கனைகளாக இவர்கள் மின்ன வேண்டும் என்பதே நமது எதிர்பார்ப்பாகும்.



