
முன்னாள் மணிமன்ற பேரவைக்கு புதிய தேசியத் தலைவர்
கோலாலம்பூர், பிப்ரவரி 11 –
மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்ற முன்னாள் உறுப்பினர்கள் பேரவையின் புதிய தேசியத் தலைவராக கெடா மாநிலத்தைச் சேர்ந்த க. கணேசன் ஏகமனதாகத் தேர்வு செய்யப்பட்டார். தேசியத் துணைத் தலைவராக சிலாங்கூரைச் சேர்ந்த டாக்டர் பெ. வேலாயுதம் பொறுப்பேற்றார்.
முன்னாள் தேசியத் தலைவர் டத்தோ ஆர்.ஆர்.எம். கிருஷ்ணன் மற்றும் இடைக்காலத் தலைவர் மு. இராமசந்திரன் ஆகியோரின் மறைவுக்குப் பின்னர், கடந்த பிப்ரவரி 7 ஆம் தேதியன்று கிள்ளானில் நடைபெற்ற உச்சமன்றக் கூட்டத்தில் இந்தத் தேர்வு நடைபெற்றுள்ளது.
அமைப்புச் சட்ட விதியின் படி, அடுத்த இரண்டாண்டு பேராளர் மாநாடு வரை இத்தேர்வுகள் செல்லுபடியாகும். மேலும், உச்சமன்ற உறுப்பினர்களாக சிலாங்கூரைச் சேர்ந்த சி. சுப்ரமணியம், கெடாவைச் சேர்ந்த எஸ்.பி. கார்த்திகேசு, கூட்டரசு பிரதேசத்தைச் சேர்ந்த அ. செல்வராஜூ மற்றும் நெகிரி செம்பிலானைச் சேர்ந்த தி. சத்தியசீலன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
புதிய தலைவர் க. கணேசன், உறுப்பினர்களுக்கான மரணசகாய நிதித் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும், 40 வயதுக்கு மேற்பட்ட முன்னாள் மணிமன்ற உறுப்பினர்களை இணைத்து அமைப்பை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.
கடந்த 2007ஆம் ஆண்டு இளைஞர் மேம்பாட்டு சட்டத்தின் வயது வரம்பைத் தொடர்ந்து, முன்னாள் உறுப்பினர்களுக்கான தளமாக இப்பேரவை கடந்த 2012 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டு, 2013 ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வ அங்கீகாரம் பெற்றது குறிப்பிடத்தக்கது.



