
கோலாலம்பூர், பிப்ரவரி-21 – பேராக், மஞ்சோங், ஆயர் தாவார் பொதுச் சந்தையில் தமிழ் உட்பட மும்மொழிகளில் பெயர்ப் பலகை வைக்கப்பட்ட விஷயத்தில், இரட்டை வேடம் வேண்டாமென, பாஸ் கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் Ahmad Fadhli Shaari-யை DAP நினைவுறுத்தியுள்ளது.
மலாய், சீனம், தமிழ் ஆகிய 3 மொழிகளில் பெயர்ப் பலகை வைக்கப்படுவது ஒன்றும் புதிதல்ல; 2019-ஆம் ஆண்டிலேயே தெலுக் இந்தான் ஈரச் சந்தையில் மும்மொழிப் பெயர்ப் பலகை வைக்கப்பட்டுள்ளது.
பல்லின மக்கள் வந்துபோகும் அவ்விடத்தில் இதனால் இதுவரை பிரச்னை வந்ததில்லை; மாறாக, நோன்புப் பெருநாள் காலங்களில் அச்சந்தைக் களைக் கட்டும்.
இப்படியிருக்க, இப்போது தேவையில்லாமல் மும்மொழிப் பெயர்ப் பலகையைப் பிரச்னையாக்குவது அரசியல் ஆதாயம் தேடும் நடவடிக்கையே அன்றி வேறொன்றும் இல்லை என DAP இளைஞர் பிரிவுத் தலைவர் Woo Kah Leong சாடினார்.
முன்பு மக்கள் கூட்டணியில் (Pakatan Rakyat) இருந்த போது, வேற்றுமையில் ஒற்றுமை என்ற கொள்கையுடன் இணங்கிப் போன பாஸ், இப்போது வேறு கூட்டணியில் இருப்பதால் மாற்றி பேசக்கூடாது.
என்னதான் அரசியலாக இருந்தாலும், மக்கள் பிரச்னையில் இரட்டை வேடம் கூடாது என Kah Leong அறிவுறுத்தினார்.
அரசாங்கக் கட்டடங்களில் மும்மொழிப் பெயர்ப்பலகைகள் வைப்பது இனி கொள்கையாகி விடுமா என, பாசீர் மாஸ் நாடாளுமன்ற உறுப்பினருமான Ahmad Fadhli, முன்னதாக வீடமைப்பு ஊராட்சித் துறை அமைச்சை கிண்டலடித்தார்.
3 மொழிகளில் பெயர்ப் பலகைகளை வைக்கும் அளவுக்கு அப்படி என்ன அவசியம் வந்து விட்டது என அவர் கேட்டிருந்தார்.