
முவார், மே 6 – கடந்த வெள்ளிக்கிழமை, முவார் பக்ரியில், வீடொன்றில் நுழைந்து, மதிப்புமிக்க பொருட்களையும், 200,000 ரிங்கிட்டுக்கும் அதிகமான மதிப்புள்ள சொகுசு வாகனத்தையும் திருடிய, இரண்டு முகமூடி அணிந்த நபர்களைப், போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இச்சம்பவத்தில், அந்தக் கொள்ளையர்கள் கருப்பு நிற உடையணிந்து, லெக்ஸஸ் பல்நோக்கு வாகனத்தைப் (MPV) பயன்படுத்தி, அவ்வீட்டுத் தோட்டத்தில் இருந்து வெளியேறும் காட்சிகளை CCTVயில் காண முடிகின்றது.
பாதிக்கப்பட்ட நபர், வீட்டுக்கு திரும்பியவுடன், தன்னுடைய சேதமடைந்த வீட்டில், தனது MPV வாகனம் மற்றும் பணம் திருடப்பட்டதைக் கண்டு காவல் நிலையத்திற்கு விரைந்துள்ளார்.
இந்நிலையில் பாதிக்கப்பட்டவருக்கு 230,000 ரிங்கிட் பணம் இழப்பு ஏற்பட்டதாக விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளதென்று மூவார் மாவட்ட காவல்துறைத் தலைவர் ரைஸ் முக்லிஸ் அஸ்மான் அஜீஸ் (Raiz Mukhliz Azman Aziz) தெரிவித்தார்.
மேலும் போலீசார் கொள்ளையர்களைத் தேடும் பணியில் தீவிரமாக இருப்பதாகவும், தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக காவல் நிலையத்தைத் தொடர்புக்கொள்ள வேண்டுமெனவும் அவர் கேட்டுக் கொண்டார்.