
புத்ராஜெயா, மே-15 – ‘மை கியோஸ்க் 2.0’ திட்டத்தின் கீழ் கியோஸ்க் விற்பனைக் கூடாரங்களின் விலை ஒவ்வொன்றும் 25,000 ரிங்கிட்டுக்கு அதிகரித்திருப்பது சமூக வலைத்தளவாசிகள் மத்தியில் சர்ச்சையாகியுள்ளது.
இதையடுத்து, வீடமைப்பு – ஊராட்சித் துறை அமைச்சான KPKT தனது facebook பக்கம் வாயிலாக அதற்கு உரிய விளக்கமளித்துள்ளது.
சிறு வணிகர்களின் நல்வாழ்வை மேம்படுத்தும் நோக்கத்திற்காக, அந்த கியோஸ்க் கூடாரங்களில் குறிப்பிடத்தக்க வடிவமைப்பு மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதிக சூரிய ஆற்றல் திறன், LED விளக்குகள் உள்ளிட்ட மேம்படுத்தப்பட்ட மின் அமைப்புகள் மற்றும் பயனர் தோழமை வடிவமைப்பு ஆகியவை அவற்றில் குறிப்பிடக்கத்தக்கவை.
இவையனைத்தும், குறு சிறு தொழில்முனைவோருக்கு நிலையான வருமானம் ஈட்டும் நடவடிக்கைகளை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக அமைச்சு விளக்கியது.
இதன் காரணமாகவே செலவு தலா 25,000 ரிங்கிட்டை எட்டியுள்ளது; இருப்பினும், வாடகை விகிதம் குறைவாகவே உள்ளது, மாதத்திற்கு 300 ரிங்கிட்டை அது தாண்டவில்லை; தவிர வியாபாரிகளுக்கு 6 மாத வாடகை விலக்குச் சலுகையும் வழங்கப்படுவதை KPKT சுட்டிக் காட்டியது.
2022-ல் அறிமுகமான ‘மை கியோஸ்க் 1.0’ திட்டத்தின் கீழ் ஒரு கியோஸ்க் கூடாரம் 15,000 ரிங்கிட் செலவை உட்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
B40 மற்றும் குறு சிறு நடுத்தர வியாபாரிகளுக்கு தரமான, பாதுகாப்பான மற்றும் வசதியான வணிக இடங்களை வழங்குவதே இந்த ‘மை கியோஸ்க்’ திட்டமாகும்.