
சுங்கை பூலோ, மே 31 – பண்டார் பாரு சுங்கைப் பூலோவில்
லோரி ஒன்று மோட்டார் சைக்கிள் , சாலையோரம் இருந்த அங்காடிக் கடை மற்றும் பள்ளிவாசலின் வேலியில் மோதிய சம்பவத்தில் 30 வயது ஆடவர் உயிரிழந்தார். சுங்கைப் பூலோ பண்டார் பாரு பள்ளிவாசலுக்கு அருகே நிகழ்ந்த இந்த விபத்து குறித்து தகவல் கிடைக்கப்பெற்றவுடன் தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் நிகழ்விடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
நிஸான் UD லோரி, ஒரு மோட்டார் சைக்கிளை மோதியபின் சாலையோரத்தில் இருந்த அங்காடிக் கடை மற்றும் பள்ளிவாசலின் வேலியையும் மோதியதாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் நடவடிக்கை அதிகாரி ரோஸ்டி ஹைனான் ( Rosdi Hainan ) தெரிவித்தார். லோரியின் அடியில் சிக்கிக் கொண்ட ஆடவர் சுயநினைவற்ற நிலையில் மீட்கப்பட்டபோதிலும் ,அவர் இறந்ததாக சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு வந்த மருத்துவ அதிகாரி உறுதிப்படுத்தினார்.