Latestமலேசியா

ரஷ்யா – யுக்ரேய்ன் இடையில் மிகப்பெரிய கைதிகள் பரிமாற்றம்; தலா 390 பேர் விடுவிப்பு

செர்னிவ், மே-24 – ரஷ்யா – யுக்ரேய்ன் இடையிலான போரில் புதியத் திருப்பமாக மிகப் பெரிய கைதிகள் பரிமாற்றம் சாத்தியமாகியுள்ளது.

அமைதி முயற்சியின் கீழ் இரு நாடுகளும் நேற்று தலா 390 கைதிகளை விடுவித்தன.

வரும் நாட்களில் இன்னும் அதிகமான போர்க் கைதிகள் விடுவிக்கப்படுவர் என்றும் அவை உறுதியளித்தன.

போர் தொடங்கிய பிறகு முதல் முறையாக, கடந்த வாரம் துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் ரஷ்ய – யுக்ரேய்ன் அதிகாரிகள் நேருக்கு நேர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இரண்டு மணி நேர அச்சந்திப்பில் சுமார் ஆயிரம் கைதிகளை பரிமாற்றம் செய்ய இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டனர்.

அதன் முதல் கட்டமாகவே வெள்ளிக்கிழமையன்று கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.

அவர்களில் இரு தரப்பிலும் 270 பேர் இராணுவ வீரர்கள், 120 பேர் பொது மக்களாவர்.

இன்றும் நாளையும் மேலும் பலர் விடுவிக்கப்படலாம் என, யுக்ரேனிய அதிபர் வொளாடிமிர் செலன்ஸ்கி கூறினார்.

இந்தக் கைதிகள் பரிமாற்றத்தை வரவேற்ற அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், இது அடுத்து நிகழப் போகும் பெரிய சம்பவத்துக்கான அறிகுறியாக இருக்குமோ என நிரந்தர போர் நிறுத்தம் பற்றி பூடகமாக பேசினார்.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பா சந்தித்த மோசமான போராகக் கருதப்படும் இந்த ரஷ்ய -யுக்ரேய்ன் சண்டையில், இரு தரப்பிலுமே இதுவரை லட்சக்கணக்கான படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

யுக்ரேனிய நகரங்களை முற்றுகையிட்டு ரஷ்ய படைகள் குண்டு வீச்சு தாக்குதல் நடத்தியதில் பல்லாயிரக்கான பொது மக்களும் கொல்லப்பட்டுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!