
செர்டாங், ஜூன்-1 – வெளிநாட்டு மீன் இனங்கள் பொது நீர் நிலைகளில் விடப்படுவதைக் கட்டுப்படுத்துவதை வலுப்படுத்தும் நடவடிக்கையாக, மீன்வளத் துறை புதிய ஒழுங்குமுறையை வரையவுள்ளது.
பூர்வீக நீர்வாழ் உயிரினங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதைத் தவிர்க்கவும், இயற்கை நிலைத்தன்மையை நிலைநாட்டவும் இது அவசியமென அறிக்கையொன்றில் அது கூறியது.
ஊடுருவும் இனமான ஆப்பிரிக்க கெளுத்தி மீன்கள் செர்டாங் MAEPS ஏரியில் விடப்பட்டதாக புகார்கள் கிடைத்திருப்பதை அடுத்து, அத்துறை அவ்வாறு கூறியது.
MARDI எனப்படும் மலேசிய விவசாய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகம் ஏற்பாடு செய்த மீன்பிடிக்கும் போட்டியின் போது அம்மீன்கள் ஏரியில் விடப்பட்டன.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு வருகை மேற்கொண்டு, MARDI மற்றும் போட்டி ஏற்பாட்டு நிறுவனத்துடன் மீன்வளத் துறை கலந்துரையாடியதில், சில தடுப்பு நடவடிக்கைகளுக்கு இணக்கம் காணப்பட்டன.
கூண்டு போன்ற hapa வலைகளை மேலும் அதிகமாக பொருத்துவதும் அவற்றிடங்கும்.
அதோடு, போட்டி நெடுகிலும் இந்த வெளிநாட்டு மீன்களின் அபாயம் குறித்த விழிப்புணர்வு கையேடுகளும் வெளியிடப்படும்.
மே 29-ஆம் தேதி தலா 1.5 கிலோ கிராம் எடையில் 1,300 ஆப்பிரிக்க கெளுத்தி மீன்கள் ஏரியில் விடப்பட்டுள்ளன.
ஆனால் இது குறித்து சிலாங்கூர் மீன்வளத்துறையிடம் முன்கூட்டியே தெரிவிக்கப்படவோ அனுமதிப் பெறப்படவோ இல்லை.
எனவே நீர்நிலைகளில் மீன்களை விட விரும்புவோர், முதலில் மீன் வளத்துறையிடம் சரிபார்த்துக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.