
கோலாலம்பூர், ஜனவரி 8: வடகிழக்கு பருவமழை காலத்தில், கனமழை, இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்று போன்ற கடுமையான வானிலைகள் அவ்வப்போது ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக மலேசிய வானிலை ஆய்வு துறையான MetMalaysia தெரிவித்துள்ளது.
பருவமழையால் வழக்கமாக பாதிக்கப்படும் கிழக்குக் கரையோரப் பகுதிகள், சபா மற்றும் சரவாக் மட்டுமின்றி, மேற்கு கரையோரப் பகுதிகளிலும், தேவையான வளிமண்டல சூழல் இருந்தால் இத்தகைய வானிலை உருவாகலாம் என துணை இயக்குநர் Ambun Dindang கூறினா.
அவர் விளக்குகையில், காற்றின் திசை, வேகம் மற்றும் காற்று ஒருங்கிணையும் நிலை ஆகியவை கடுமையான வானிலை உருவாக முக்கிய காரணிகளாக உள்ளன. குறிப்பாக, மோன்சூன் தள்ளல் அதாவது Monsoon Surge ஏற்பட்டால், முதல் மூன்று நாட்கள் வரை தொடர்ச்சியான கனமழை பெய்யக்கூடும் எனவும் வெள்ளம் ஏற்படும் அபாயமும் உள்ளதாகவும் எச்சரித்துள்ளார்.
பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க, MetMalaysia மஞ்சள் அதாவது கவனம், மோசமான வானிலையைக் குறிக்கும் ஆரஞ்சு மற்றும் அபாயத்தைக் குறிக்கும் சிவப்பு என மூன்று நிலைகளில் வானிலை எச்சரிக்கைகளை வெளியிடவுள்ளது.
வடகிழக்கு பருவமழை மார்ச் மாதத்தில் முடிவடையும் என எதிர்பார்க்கப்பட்டாலும், கனமழை கொண்ட மோன்சூன் தள்ளல் எந்த நேரத்திலும் ஏற்படக்கூடும் என்பதால், தொடர்ச்சியான கண்காணிப்பு அவசியம் என வலியுறுத்தப்பட்டது.
MetMalaysia 24 மணி நேரமும் வானிலை கண்காணிப்பு மேற்கொண்டு வருவதாகவும், அபாய அறிகுறிகள் தென்பட்டவுடன் முன் எச்சரிக்கை வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.



