
பெட்டாலிங் ஜெயா, ஜூன்-25 – கடந்த வாரம் பிரமாண்டமாக நடந்து முடிந்த வணக்கம் மலேசியாவின் 21-ஆண்டு நிறைவு விழாவில் 4 சாதனையாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
அவர்களின் சாதனைக் கதைகளை வணக்கம் மலேசியா ஏற்கனவே அதன் நேயர்களுக்கு கொண்டு வந்துள்ளது.
அவ்வகையில் கிளந்தான், குவா மூசாங்கைச் சேர்ந்த ஜெகன் பெருமாளுக்கு Empowered Spirit Icon விருது வழங்கப்பட்டது.
மின்சாரம் மற்றும் மின்னணு பொறியியல் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றவரான இவர், மின்சாரம், நிரல் கட்டுப்பாடு, நியூமெடிக் மற்றும் ஹைட்ராலிக்ஸ் ஆகியவற்றில் மேம்பட்ட உபகரணங்களைச் சரிசெய்யும் திறன் கொண்டவர்.
2009-ஆம் ஆண்டு TVET புத்தாக்கப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவர்.
இன்று… ஒருங்கிணைந்த பொறியியல் தீர்வுகளில் நிபுணத்துவம் பெற்ற தொழில்முறை நிறுவனமான JP Global நிறுவனத்தின் இயக்குநர்.
ஆரம்பத்தில் சிறிய சிறிய வையரிங் வேலைகளில் ஈடுபட்டவர், கோவிட் காலத்துக்குப் பிறகு முழுக்க விவசாயத் துறையில் சொந்தமாக IOT அமைப்பு முறையை உருவாக்கினார்.
இதுவரை நாடு முழுவதும் 136 தளங்களில் இந்த IOT அமைப்பு முறையைப் பொருத்தியுள்ளார் .
இத்துறையில் கிரேட் A பெறுவதே இவரின் இலக்காகும்.
அடுத்து, கெடாவைச் சேர்ந்த 27 வயது இளைஞர் ஹேம ரூபன் என்ற ரூபனுக்கு Endurance Spirit Icon விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
2 கண்களிலும் பார்வை பறிபோன இவருக்கு, வாழ்வில் சாதிக்க அது ஒரு தடையாக இல்லை.
தீபாவளி பலகாரங்களை விற்றவர், படிப்படியாக கேக் தொழிலிலும் இறங்கினார்.
லட்டு, கேண்டி, கேக், பிஸ்கட்டு என சொந்தமாக இவர் தயாரித்து, உள்நாட்டில் மட்டுமின்றி இந்தியா, சிங்கப்பூர், Hong Kong வரை அவற்றை ஏற்றுமதி செய்கிறார்.
வாழ்க்கையில் எத்தனை சவால்கள் வந்தாலும் அவற்றை எதிர்த்து நின்று, முன்னோக்கி பீடு நடை போட வேண்டுமென்பதே இவரின் தாரக மந்திரம்;
எந்தவொரு நிலைமையும் தனது முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கக் கூடாது என்ற திடமான வேட்கைக்காக, ரூபனுக்கு Endurance Spirit Icon என்ற விருது வழங்கப்பட்டது.
உருமாற்றத்திற்கான உத்வேகத்தைக் கொண்டதால் Rising Spirit Icon என்ற விருது ஒரு முன்னாள் கைதியான மகேஸ்வரன் சுந்தரமூர்த்திக்கு வழங்கப்பட்டது.
கூடா நட்பு, இள ரத்தத்தால் கட்டுக்கடங்காத உணர்ச்சிகள் போன்றவற்றால் , 18 வயது கூட ஆகாத நிலையில், ஒரு கொலைக் குற்றத்தில் ஈடுபட்டு, 12 ஆண்டுகள் சிறைக்குச் செல்லும் சூழ்நிலைக்கு இவர் தள்ளப்பட்டார்.
இள வயது குற்றவாளியான இவர் சிறையில் சில நல்லுள்ளங்களின் வழிகாட்டுதல் மூலம் படித்து SPM தேர்வில் 7A-களையும் பெற்றார்; பிறகு டிப்ளோமா பட்டதாரி.
நன்னடத்தைக் காரணமாக 8 வருடங்களில் சிறைலிருந்து விடுதலையானவர், இன்று தனியார் துறையில் வேலை செய்துகொண்டு, நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவி, கருணையின் வடிவாக திகழும் லாவணியா கணபதிக்கு Compassion Spirit Icon விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
3 பிள்ளைகளுக்குத் தாய்; இவரின் மூத்தப் பிள்ளைக்கு 6 வயதில் புற்றுநோய் கண்டு அதற்கு சிங்கப்பூரில் சிகிச்சையளிக்க 750,000 ரிங்கிட் செலவானது.
காப்புறுதி பாதுகாப்பு இருந்ததால், சிகிச்சை செலவை ஈடுகட்ட முடிந்தது.
அப்போது தான் அவருக்கு ஒரு யோசனைத் தோன்றியது; காப்புறுதி பாதுகாப்பு இல்லாதவர்கள் இது போன்ற சூழ்நிலையில் என்ன செய்வார்கள் என்று…
அதன் மூலமாக உதயமானதே CCAM எனப்படும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான மலேசியச் சங்கம்.
லாவணியா புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இந்த அரசு சாரா இயக்கத்தின் மூலம் உதவி வருகிறார்.
இப்படி சோதனைகளைச் சாதனையாக்கியவர்கள், தன்னலமற்ற சேவைகளை வழங்கி வருபவர்கள், உருமாற்றத்தின் அடையாளமாக திகழ்பவர்களுக்கு முகவரி வழங்கி, அங்கீகாரம் வழங்கியதில் வணக்கம் மலேசியா பெருமையும் ஆத்ம திருப்தியும் கொள்கிறது.