
புத்ரா ஜெயா, ஜன , 14 – தேசிய ஒருங்கிணைந்த குடியேற்ற அமைப்பின் (MyNIISe) பயன்பாடு அமல்படுத்தப்படும் நாட்டின் நுழைவு மையங்களில் இயல்பான கடப்பிதழைப் பயன்படுத்தி ‘ஆட்டோகேட்’ வசதி மூலம் பரிசோதிக்கும் முறையை இன்னும் பயன்படுத்தலாம் என்பதால் பொதுமக்கள் கவலைப்படத் தேவையில்லையென குடிநுழைவுத்துறையின் தலைமை இயக்குநர் டத்தோ ஷக்கரியா ஷபான் ( Zakaria Shaaban ) தெரிவித்தார்.
MyNIISe மூலம் QR குறியீடுகளைப் பயன்படுத்துவது விருப்பத்திற்குரியது என்பதோடு , நன்மையையும் விரைவான அனுமதி அனுகூலங்களையும் பெறமுடியும் என அவர் கூறினார்.
இந்த புதிய செயலியை பயன்படுத்தாவிட்டால் வழக்கமான முகப்பிடங்களில் கடப்பிதழை பரிசோதிக்க முடியும் என இன்று குடிநுழைவுத்துறை பல நோக்கு மண்டபத்தில் தலைமை இயக்குநரின் செய்தியை தெரிவிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டபோது டத்தோ ஷக்கரியா தெரிவித்தார்.
முன்னதாக, ஜனவரி 15 ஆம் தேதி முதல் MyNIISe நடமாடும் பயன்பாட்டைப் பயன்படுத்தும் மலேசியர்களுக்கு உள்துறை அமைச்சு ஒற்றை உள்நுழைவு தளமாக MyDigital ID ஐப் பயன்படுத்தத் தொடங்கும் என்று ஊடகங்கள் செய்தி
வெளியிட்டுள்ளன.
வெளிநாட்டு பயனர்களுக்கு, MyNIISe பயன்பாட்டில் தற்போதுள்ள உள்நுழைவு முறையில் எந்த மாற்றங்களும் இல்லாமல் தொடர்ந்து பயன்படுத்தப்படும் என்று உள்துறை அமைச்சு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
இதனிடையே புதிய நடைமுறை மக்கள் நடமாட்டத்தை கடினமாக்கும் என்றும், MyNIISe பயன்பாட்டில் MyDigital ஐடியை செயல்படுத்துவது இன்னும் கட்டாயமாக்கப்பட்டு அமல்படுத்தப்படவில்லை என்று கூறப்படுவதை ஜக்கரியா மறுத்தார்.



