
,ஜகார்த்தா, ஜூன்-22 – நூற்றுக்கணக்கான ஹஜ் யாத்ரீகர்களை ஏற்றிக் கொண்டு மேற்காசியாவிலிருந்து இந்தோனேசியா திரும்பிய மேலுமொரு விமானம், வெடிகுண்டு மிரட்டலால் திருப்பி விடப்பட்டுள்ளது.
ஒரு வாரத்தில் நடக்கும் இரண்டாவது சம்பவம் இதுவாகும்.
சவூதி அரேபியா, ஜெடாவிலிருந்து புறப்பட்ட Saudi Airlines-சின் SV5688 அவ்விமானம், ஓமானில் இறங்கி பின்னர் அங்கிருந்து இந்தோனேசியாவின் சுராபாயாவில் தரையிறங்கத் திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால், நடுவானில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் வேறு வழியின்றி விமானம் நேற்று காலை மேடானுக்குத் திருப்பி விடப்பட்டது.
அங்குள்ள Kualanamu அனைத்துலக விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறங்கி, வெடிகுண்டு ஒழிப்புக் குழு வரவழைக்கப்பட்டு விமானம் முழு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
அனைத்து 376 பயணிகளும் 13 பணியாளர்களும் விமான நிலையத்தில் பாதுகாப்புடன் இருப்பதும் உறுதிப்படுத்தப்பட்டது.
அவர்கள் இன்று காலை பயணத்தைத் தொடருவர் என தெரிவிக்கப்பட்டது.
கடந்த செவ்வாய்க்கிழமை 442 யாத்ரீகர்களை ஏற்றிக் கொண்டு சவூதி அரேபியாவிலிருந்து ஜகார்த்தா வந்த விமானத்திற்கு மின்னஞ்சல் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் கிடைத்தது.
இதையடுத்து அவ்விமானமும் மேடானுக்குத் திருப்பி விடப்பட்டது