
மேட்ரிட், ஏப்ரல்-29, ஐரோப்பிய அண்டை நாடுகளான ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகலில் நேற்று திடீரென மாபெரும் மின்தடை ஏற்பட்டது.
இதனால் இரயில் போக்குவரத்து ஸ்தம்பிதம் கண்டு, சாலைகளில் கடும் நெரிசல் ஏற்பட்டது.
ஏராளமானோர் மின் தூக்கிகளினுள் சிக்கிக் கொண்டனர்.
நண்பகல் 12.30 மணிக்கு ஏற்பட்ட அந்த திடீர் மின்சாரத் தடையால் இரு நாட்டு மக்களும் குழம்பிபோயினர்.
கைப்பேசி சேவையும் பாதிக்கப்பட்டு பலர் வேலைக்கும் செல்லவில்லை.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பிரசித்திப் பெற்ற மேட்ரிட் பொது டென்னிஸ் போட்டியின் நேற்றைய ஆட்டங்கள் இரத்துச் செய்யப்பட்டன.
எனினும் சில மணி நேரங்கள் கழித்து மின்சார விநியோகம் கட்டங்கட்டமாக வழக்க நிலைக்குத் திரும்பியது.
அவசர அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டிய ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்ஜெஸ், இந்த வரலாறு காணாத மின்தடைக்கானக் காரணத்தைக் கண்டறிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
ஐரோப்பிய ஆணையமும் அவ்விரு நாடுகளையும் தொடர்புகொண்டு மின்தடைக்கான காரணத்தை விசாரித்து வருகிறது