
மாரான், ஏப்ரல்-1-பகாங் மாநிலம் மாரானில் அமைந்துள்ள ஸ்ரீ மாரான் மரத்தாண்டவர் ஆலயத்தில் நிறுவப்படவுள்ள திருவள்ளுவர் சிலைக்காகத் தேசிய ஒருமைப்பாட்டு துணையமைச்சர் யுனேஸ்வரன் 7000 ரிங்கிட் நிதி வழங்கியுள்ளார்.
பங்குனி உத்திரச் சிறப்பு நாளை முன்னிட்டு மரத்தாண்டவர் ஆலயத்திற்கு வருகை தந்த அவரை ஆலய நிர்வாகத்தினரும் பக்தர்களும் வரவேற்றனர்.
தமிழ் மொழியின் பெருமையையும் திருவள்ளுவரின் போதனைகளையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் நோக்கில் இந்தச் சிலை அமைக்கும் முயற்சி மேற்கொள்ளப்படுவதாகத் துணையமைச்சர் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், ஆலயப் பொறுப்பாளர்களில் ஒருவரான மருதவேலு நாராயணசாமி திருவள்ளுவர் சிலை அமைப்பதற்காக நிதி வழங்கிய தேசிய ஒருமைப்பாட்டு துணையமைச்சர் யுனேஸ்வரனுக்குத் தனது நன்றியைத் தெரிவித்தார்.
மேலும், ஆலய வளாகத்தில் மொத்தமாக 18 சித்தர்களின் சிலைகள் அமைக்கப்படவுள்ளன. அதில் திருவள்ளுவர் சிலையும் அடங்குமென அவர் தெரிவித்தார்.
இந்தச் சிலைகள் அனைத்தும் இன்னும் 4 மாதங்களில் திறப்பு விழா காணவுள்ளதையும் அவர் உறுதிப்படுத்தினார்.



