
பெட்டாலிங் ஜெயா, ஜூன்-16 – 13-ஆவது மலேசியத் திட்டத்தில் இந்தியச் சமூக மேம்பாட்டுக்கான பரிந்துரைகளை சேர்ப்பதற்கான கலந்தாய்வுகள் நிறைவுப் பெற்றுள்ளன.
இவ்வாண்டு தொடக்கம் ஏற்கனவே 4 சுற்று கலந்தாய்வுகள் நடைபெற்று முடிந்த நிலையில், நேற்று பெட்டாலிங் ஜெயா, அர்மாடா ஹோட்டலில் கடைசிக் கட்ட நிகழ்வு நடைபெற்றது.
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் சிறப்பு அதிகாரி சண்முகம் மூக்கன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் உலகளாவிய வர்த்தக ஆய்வாளருமான ,சார்ல்ஸ் சாந்தியாகோ, வணக்கம் மலேசியா நிர்வாக இயக்குனர் தியாகராஜன் முத்துசாமி, இதில் பங்கேற்றனர்.
13-ஆவது மலேசியா திட்டம் தொடர்பான இந்த கலந்தாய்வு, சமூக உணர்வுப்பூர்வ பிரச்சினைகளில் வியூக அணுகுமுறையை முன்னெடுத்து, இந்தியர்கள் போன்ற சமூகங்களின் தேவைகளை தேசியக் கொள்கைகளில் பிரதிபலிக்கும் முயற்சியை வெளிக்கொணர்கிறது.
இந்தியச் சமூகத்துக்கு தேவையானவற்றை ஒருமுகப்படுத்தி, அப்பரிந்துரைகள் மலேசியத் திட்டத்தில் சேர்க்கப்படும் வாய்ப்புகளை அதிகரிப்பதே இதன் நோக்கம் என, சார்ல்ஸ் தமதுரையில் கூறினார்.
இவ்வேளையில், இந்த ஆவண அறிக்கையை இறுதிச் செய்வதில், கல்விமான்கள், பொருளியல் வல்லுநர்கள், அரசு சார்பற்ற அமைப்பின என 40 பங்கேற்பாளர்கள் துணை நின்றதாக, சண்முகம் மூக்கன் வணக்கம் மலேசியாவிடம் கூறினார்.
கல்வி, மகளிர், இளையோர், சிறு-நடுத்தர தொழில்முனைவு உள்ளிட்ட 4 அம்சங்களில் பரிந்துரைகள் பிரிக்கப்பட்டன.
அவ்வறிக்கை தற்போதைக்கு 90 விழுக்காடு பூர்த்தியாகியுள்ளது; எஞ்சிய 10 விழுக்காடு, அரசாங்க தலைமைச் செயலாளர் மற்றும் பொருளாதார அமைச்சுக்கு அனுப்பப்பட்ட பிறகு பூர்த்தியாகும் என சண்முகம் குறிப்பிட்டார்.
இந்த ஆவண அறிக்கை வரும் மாதங்களில் பொருளாதார அமைச்சுக்கும் பிரதமருக்கும் பரிசீலனைக்காக அனுப்பி வைக்கப்படுமென்றும் அவர் சொன்னார்.
ஐந்தாண்டு கால அடிப்படையிலான 13-ஆவது மலேசியத் திட்டம், இவ்வாண்டின் மூன்றாவது காலாண்டில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படத் திட்டமிடப்பட்டுள்ளது