
புத்ராஜெயா, ஏப்ரல்-8-2025 SPM தேர்வில் 10A மற்றும் அதற்கு மேல் பெற்ற அனைத்து மாணவர்களுக்கும், மெட்ரிகுலேஷன் படிப்பை மேற்கொள்ள வாய்ப்பு வழங்கப்படும் என, கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அவ்வகையில் மொத்தம் 6,717 மாணவர்கள் இந்த நேரடி வாய்ப்பைப் பெறுவார்கள்.
இனம் அல்லது பின்புலம் கருதாது, தகுதியான அனைத்து மாணவர்களுக்கும் இவ்வாய்ப்பு வழங்கப்படும் என, சற்று முன்னர் வெளியிட்ட அறிக்கையில் அமைச்சு உத்தரவாதம் அளித்தது.
அதே சமயம், மெட்ரிகுலேஷன் திட்டத்தில் பூமிபுத்ரா மாணவர்களுக்கான 90% இட ஒதுக்கீட்டை, இது எந்த வகையிலும் பாதிக்காது என்றும் அவ்வறிக்கை உறுதிப்படுத்தியது.
10A பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் மெட்ரிகுலேஷன் வாய்ப்புக் கிடைக்க வேண்டுமென கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட நிலையில், அரசாங்கம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.



