
ஈப்போ, மே-1, முன்னாள் கணவர் வட்டி முதலையிடம் வாங்கியக் கடனை அடைக்கத் தவறியதால், பேராக் ஈப்போவில் 47 வயது மாது தினமும் அச்சத்தில் வாழ்ந்து வருகிறார்.
லாவ் என அழைக்கப்படும் அந்த ஆசிரியைக்கு வட்டி முதலை கும்பல் கொலை மிரட்டல் விடுத்துள்ளது.
1,000 ரிங்கிட்டில் தொடங்கி பின்னர் 10,000 ரிங்கிட்டாக உயர்ந்த முன்னாள் கணவரின் கடனை அடைத்தே தீர வேண்டும்; இல்லையேல் தன்னையும் 10 முதல் 17 வயதிலான 4 பிள்ளைகளையும் கொன்று விடுவோம் என கைப்பேசியில் மிரட்டப்பட்டதாக அவர் சொன்னார்.
அதோடு நிறுத்தாமல் facebook குழுவொன்றிலும் அம்மாது பிள்ளைகளோடு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அக்கும்பல் மிரட்டியுள்ளது.
இதனால் கடந்த திங்கட்கிழமை முதல் உயிருக்கு அஞ்சி நாட்களைக் கடத்தி வருவதாக, ஈப்போவில் MCA ஏற்பாடு செய்த செய்தியாளர் சந்திப்பில் லாவ் சோகத்துடன் கூறினார்.
“நான் இப்போது அவருடைய மனைவி அல்ல; அவர் வாங்கிய கடன் பற்றி எனக்கு தெரியாது” எனக் கூறியும் அவர்கள் கேட்பதாக இல்லை.
1,500 வெள்ளியைக் கொடுப்பதோடு விவாகரத்து பத்திரத்தை காட்ட வேண்டும்; இல்லையேல் பள்ளியிலேயே புகுந்து பிரச்னை செய்வோம் என ஆகக் கடைசியாக மிரட்டல் வந்துள்ளது.
போலீஸிலும் மலேசியத் தொடர்பு – பல்லூடக ஆணையமான MCMC-யிலும் அவர் புகார் செய்துள்ளார்.
மிரட்டல் வேலையில் ஈடுபடும் அந்த வட்டி கும்பலை பிடித்து போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, MCA பொது புகார் பிரிவின் பேராக் கிளை கேட்டுக் கொண்டது