
கோலாலம்பூர், ஜூன்-14- PPSMI எனப்படும் மலேசிய இந்தியர்களின் சமூகப் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களுக்கான நிதியைப் பெறுவதற்கு இவ்வாண்டு வந்த விண்ணப்பங்களை, மித்ரா இன்னமும் பரிசீலித்து வருகிறது.
அதே சமயம் 2025 வரவு செலவு அறிக்கையின் முதல் கட்டத்தில் முடிவான 45 சமூகப் பொருளியல் மேம்பாட்டுத் திட்டங்கள், பிரதமரின் அங்கீகாரத்திற்காக அனுப்பப்பட்டுள்ளன.
எனவே முடிவுகளுக்காகப் பொறுமையுடன் காத்திருக்கும் விண்ணப்பத்தாரர்களுக்கும் அவர்களின் ஒத்துழைப்புக்கும் நன்றி என, மித்ரா தலைவர் பி.பிரபாகரன் கூறினார்.
2025 PPSMI நிதிக்கான விண்ணப்பங்கள் கடந்த டிசம்பர் 2 முதல் இவ்வாண்டு ஜனவரி 5 வரை திறக்கப்பட்டன; அதற்கு 564 மில்லியன் ரிங்கிட்டை உட்படுத்திய 1,332 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றன.
வந்த விண்ணப்பங்கள் அனைத்தும் 3 மதிப்பீட்டு நிலைகளை கடக்க வேண்டியுள்ளதை பிரபாகரன் சுட்டிக் காட்டினார்.
மித்ரா பிரிவு, மித்ரா பணிக்குழு, மற்றும் மித்ரா வழிகாட்டி குழு ஆகியவையே அம்மூன்று படிநிலைகளாகும்.
இந்த 3 மதிப்பீட்டுகளையும் வெற்றிகரமாக கடந்த விண்ணப்பங்கள், இறுதி அங்கீகாரத்துக்காக பிரதமருக்கு அனுப்பி வைக்கப்படுமென்றார் அவர்.
உண்மையிலேயே உயர் தாக்கம் கொண்ட திட்டங்கள் மட்டுமே அங்கீகரிக்கப்படுவதை உறுதிச் செய்யவே, இந்த பல கட்ட பரிசீலனைகளும் மதிப்பீடுகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
அதுவும் வெளிப்படையாக, நேர்மையாக மற்றும் பரிவுடன் அவை மேற்கொள்ளப்படுகின்றன.
எது எப்படி இருந்தாலும், இந்தியச் சமூகப் பொருளாதார நிலையை உயர்த்த ஏதுவாக, ஒவ்வொரு நிதி ஒதுக்கீடும் நியாயமாகவும் ஆக்கப்பூர்வமான முறையிலும் விநியோகம் செய்யப்படுமென, பத்து நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபாகரன் உத்தரவாதமளித்தார்.
இவ்வாண்டுக்கான PPSMI நிதி விநியோகம் ‘தேவையில்லாமல்’ தாமதமாகியுள்ளதாகவும், எனவே அதில் பிரதமர் தலையிட வேண்டுமென்றும், செனட்டர் Dr லிங்கேஷ்வரன் ஆர் அருணாச்சலம் முன்னதாக கேட்டுக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது