
கோலாலம்பூர், ஜூலை 10 – கடந்த மே 31ஆம் தேதி வரை, ஊழியர் சேமநிதியான EPF-இன் மூன்றாவது கணக்கிலிருந்து (akaun fleksibel) 5.5 மில்லியன் உறுப்பினர்கள் மொத்தம் 19.87 பில்லியன் ரிங்கிட் பணத்தை எடுத்துள்ளனர்.
அதே காலகட்டத்தில், அந்தக் கணக்கில் 14.36 பில்லியன் ரிங்கிட் இருப்பு இருந்ததாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
2024 மே முதல் 2025 அக்டோபர் வரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, சுமார் 37 விழுக்காடு அதாவது 5 மில்லியன் உறுப்பினர்கள் குறைந்தது ஒருமுறையாவது மூன்றாவது கணக்கிலிருந்து பணம் எடுத்துள்ளனர். அதேவேளை, 63 விழுக்காட்டினர் எந்தப் பணத்தையும் எடுக்கவில்லை.
பணம் எடுத்தவர்களில் பெரும்பாலோர் அன்றாட வாழ்க்கைச் செலவுகள், மருத்துவச் செலவுகள் மற்றும் கடன் திருப்பிச் செலுத்துவதற்காக அந்த வசதியை பயன்படுத்தியதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
மேலும், அந்தக் கணக்கிலிருந்து மாதாந்திர பணம் பெறும் அளவு தற்போது நிலையானதாக மாறியுள்ளதுடன், 2025ஆம் ஆண்டு மாதத்திற்கு சராசரியாக 440 மில்லியன் ரிங்கிட் மட்டுமே எடுக்கப்பட்டதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
ஓய்வூதிய சேமிப்பின் நிலைத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில், சேமிப்பு அமைப்பைத் தொடர்ந்து பாதுகாப்பது, நிதி அறிவை மேம்படுத்துவது, கூடுதல் மற்றும் தன்னார்வ பங்களிப்புகளை ஊக்குவிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சு கூறியுள்ளது.



