
6 வயது குழந்தைகளை முதலாமாண்டில் சேர்க்க கல்வி அமைச்சு முழுத் தயார் நிலையில் உள்ளது
நிபோங் தெபால், பிப்ரவரி-8,
6 வயது குழந்தைகளை அடுத்தாண்டு முதல் வகுப்பில் சேர்ப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிவடைந்துவிட்டதாக, கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
மாணவர்கள் எளிதாக ஆரம்பக் கல்வியைத் தொடங்குவதற்காக டிஜிட்டல் பதிவு முறை, பள்ளி வசதிகள், மற்றும் ஆசிரியர் எண்ணிக்கை அனைத்தும் தயாராக உள்ளன.
ஏற்கனவே தாம் மக்களவையில் கூறியது போல, உச்சக் கட்ட தயார் நிலையோடு இக்கொள்கை அமுலுக்கு வருமென, அமைச்சர் ஃபாட்லீனா சிடேக் கூறினார்.
இணையம் வாயிலான பதிவு பிப்ரவரி 15-ஆம் தேதி தொடங்கவிருக்கும் நிலையில், தொடக்கக் கட்ட தகவல்களின் படி, நகர்ப்புறங்களில் பெற்றோர்கள் அதிக ஆர்வம் காட்டுவதால், மாணவர் சேர்க்கை பெருமளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், தற்போதுள்ள வசதிகளை அடையாளம் காண்பது, வகுப்புக் கொள்ளளவை அதிகரிப்பது மற்றும் அதிக மாணவர்களின் வருகையைப் பெறுமென எதிர்பார்க்கப்படும் பள்ளிகளை மேம்படுத்துவது உள்ளிட்ட பணிகளில் அமைச்சு முழு கவனம் செலுத்தி வருகிறது.
தரமான கல்வியை அனைவருக்கும் சமமாக வழங்குவதே மடானி அரசாங்கத்தின் கடப்பாடு என ஃபாட்லீனா கூறினார்.



