
கோலாலாம்பூர், ஏப்ரல்-10-நாட்டின் மிக மூத்த அரசியல் கட்சிகளில் முக்கியமானதான ம.இ.காவுக்கு இவ்வாண்டு 80 வயதாகும்.
மலேசிய இந்தியர்களின் தாய்க் கட்சி என போற்றப்படும் அளவுக்கு அவர்களின் வாழ்க்கையில் பின்னிப் பிணைந்த இக்கட்சியின் 80 ஆண்டு பாரம்பரியத்தை, பெரிய விழாவாகக் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அனைவரும் ஆச்சரியப்படும் வகையில், குறிப்பாக ம.இ.காவைக் கிள்ளுக் கீரையாக நினைப்பவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்த 80-ஆம் ஆண்டு விழா அமையுமென, அதன் தேசிய உதவித் தலைவர் டத்தோ டி. முருகையா கூறினார்.
அவ்வகையில், ஜூலை மாதம் தொடங்கி ஆகஸ்ட் கடைசி வரை, கூட்டுப் பிராத்தனை, குடும்ப தின விழா, மருத்துவ முகாம் உள்ளிட்ட மொத்தம் 9 கொண்டாட்ட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
முக்கியமாக, townhall நிகழ்வுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக, 80-ஆம் ஆண்டு விழாக் குழுத் தலைவருமான முருகையா சொன்னார்…
இவற்றில் கட்சி உறுப்பினர்கள் மட்டுமின்றி, சுற்று வட்டார மக்களும் பங்கேற்கலாம் என்றார் அவர்.
முடிவாக, மாநில ரீதியில் விருந்து நிகழ்வும் நடைபெறவுள்ளது…
1946-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ம.இ.கா, மலேசியாவின் பன்முக இன அரசியல் அமைப்பில், இந்த 80 ஆண்டுகளில் இந்தியச் சமூகத்தின் உரிமைகள், கல்வி முன்னேற்றம் மற்றும் சமூக-பொருளாதார வளர்ச்சியை பாதுகாக்கவும் முன்னெடுக்கவும் முக்கிய பங்கு வகித்து வருகிறது.



