
கோலாலம்பூர், நவம்பர்-8 – தென் லெபனானில் அமைதிக் காப்புப் பணியில் ஈடுபட்டுள்ள மலேசிய MALBATT 850 காலாட்படை வீரர்களில் அறுவர், இஸ்ரேலியப் படைகள் நடத்திய ட்ரோன் தாக்குதலில் காயமடைந்துள்ளனர்.
ஐவருக்கு சிராய்ப்புக் காயங்கள் ஏற்பட்ட வேளை, இன்னொருவர் கைகளில் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
தற்காப்பு அமைச்சர் டத்தோ ஸ்ரீ மொஹமட் காலிட் நோர்டின் அதனை உறுதிபடுத்தினார்.
சிராய்ப்புக் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு, அவர்கள் கடமைகளைத் தொடருவதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஐநாவின் அமைதிக் காப்புப் பணியின் கீழ் பணியாற்றி வரும் MALBATT படையை ஏற்றியிருந்த வாகனம் சாலைத் தடுப்புச் சோதனையைக் கடக்கும் போது, அருகிலிருந்த ஒரு காரின் மீது ட்ரோன் குண்டு வீசப்பட்டது.
அதில் 3 லெபனானியர்கள் கொல்லப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.