
கோலாலம்பூர், நவ 20 – சுபாங்கிலிருந்து டமன்சாரா செல்லும் NKVE நெடுஞ்சாலையில் 14.4 ஆவது கிலோமீட்டரில் நேற்றிரவு மணி 9 அளவில் 7 வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் 36 வயது ஆடவர் ஒருவர் வாகனத்தில் சிக்கி காயத்திற்கு உள்ளானார். தகவல் அறிந்து சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு விரைந்த டமன்சாரா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த 10 உறுப்பினர்கள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். தனது காரில் சிக்கிக்கொண்ட அதன் ஓட்டுனரை தீயணைப்பு வீரர்கள் மீட்டு மேல் நடவடிக்கைக்காக அவரை மருத்துவ குழுவிடம் ஒப்படைத்தனர். இந்த விபத்தினால் நெடுஞ்சாலையில் 5 கிலோமீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக X தளத்தில் பிளஸ் நெடுஞ்சாலை நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.