
வாஷிங்டன், ஏப்ரல்-18, சீனாவுக்கு நாள்தோறும் தடாலடியாக வரி விதித்து வந்த அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், திடீரென பேச்சில் சுதி குறைந்தவராய் “சீனாவுடன் பேசி வருகிறோம்” எனக் கூறியுள்ளார்.
“சீனா எங்களைத் தொடர்புகொள்ள பல முறை முயற்சி செய்தது. இப்போது அவர்களுடன் பேசி வருகிறோம்” என வெள்ளை மாளிகையில் அவர் பேசினார்.
பரஸ்பர வரியை அமெரிக்கா 145 விழுக்காடாக உயர்த்தியப் பிறகு சீனா இறங்கி வந்ததாக டிரம்ப் கூறிக் கொண்டார்.
“சீன அதிபர் சீ சின் பிங் உங்களைத் தொடர்புகொண்டாரா?” என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு டிரம்ப் நேரடியாகப் பதிலளிக்கவில்லை.
அதைப் பற்றி இப்போது பேசுவது சரியாக இருக்காது; பிறகு பார்ப்போம் என சுருக்கமாக அவர் முடித்துக் கொண்டார்.
எது எப்படி இருப்பினும் அவ்விரு பொருளாதார வல்லரசுகளும் இந்த வரிப் போரை முடிவுக்குகக் கொண்டு வரும் உடன்பாட்டை எட்ட முடியுமென டிரம்ப் நம்பிக்கைத் தெரிவித்தார்.