
பாகான் டாலாம், ஏப்ரல்-30, பினாங்கு பாகான் டாலாம், ஊஜாங் பத்துவில் குடியிருப்புப் பகுதியில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் 3 வீடுகள் அழிந்தன.
நல்லவேளையாக உயிர் சேதம் ஏற்படவில்லை.
ஒரு சிறுவன் மட்டுமே கையில் காயமடைந்தான்.
தீ ஏற்பட்ட தகவல் பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணனுக்கும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து கொம்தாரில் முதல் அமைச்சருடன் நடைபெறவிருந்த கூட்டத்திற்குச் செல்வதை இரத்துச் செய்து விட்டு அவர் உடனடியாக சம்பவ இடம் விரைந்தார்.
பொருள் சேதங்களைத் தவிர்க்க முடியாததால், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தற்காலிக நிவாரணமாக, அம்பாங் ஜாஜார் அடுக்குமாடி குடியிருப்பில் அவர்கள் தங்க வைக்கப்பட்டனர்.
அதற்கு உடனடி ஏற்பாடு செய்துகொடுத்த வீடமைப்பு துறைக்கான பினாங்கு ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ ஸ்ரீ எஸ்.சுந்தரராஜு மற்றும் பினாங்கு வீடமைப்பு வாரியத்துக்கு குமரன் நன்றித் தெரிவித்துக் கொண்டார்.
சமூக நலத் துறையான JKM, செபராங் பிறை உத்தாரா மாவட்ட- நில அலுவலகம், பாகான் நாடாளுமன்ற உறுப்பினரின் அலுவலகம், மற்றும் குமரனின் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் வாயிலாவும் உடனடி உதவிகள் வழங்கப்பட்டன.
தீயணைப்புப் படை, போலீஸ், மருத்துவக் குழு, பொது தற்காப்புப் படை உள்ளிட்ட அனைத்துத் தரப்புகளுக்கும் குமரன் கிருஷ்ணன் நன்றித் தெரிவித்தார்.
அப்பகுதியில் தீ கொழுந்து விட்டு எரியும் வீடியோக்கள் முன்னதாக வைரலாகியது குறிப்பிடத்தக்கது