
கோலாலம்பூர், ஏப் 30 – தற்போது நாட்டைப் பாதிக்கும் வெப்பமான மற்றும் வறண்ட வானிலை அடுத்த மாதத்தின் நடுப்பகுதி அல்லது இறுதி வரை தொடரும் என்று (METMalayisia ) எனப்படும் மலேசிய வானிலைத்துறை கணித்துள்ளது.
பருவமழை மாற்றக் கட்டத்திற்கு வெளியே, அதாவது வடகிழக்கு பருவமழை மற்றும் தென்மேற்கு பருவமழை காலத்தின் இறுதியில் ஏற்படும் என்பதோடு இத்தகைய வானிலை நிலைமைகள் ஒரு சாதாரண நிகழ்வு என்று METMalaysia தலைமை இயக்குநர் டாக்டர் முகமட் ஹிஷாம் முகமட் அனிப் ( Mohd Hisham Mohd Anip ) தெரிவித்தார்.
உதாரணமாக, நாடு தற்போது பருவமழை மாற்றக் கட்டத்தில் இருப்பதால் , இது அடுத்த மாதத்தின் நடுப்பகுதி அல்லது இறுதி வரை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கட்டத்தில், வானிலை பொதுவாக மதிய வேளையில் வெப்பமாகவும், பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் மற்றும் மாலை வேளையில் ஈரப்பதமாகவும் இருக்கும் என்று அவர் கூறினார்.
தற்போது பல பகுதிகளில் நிலவும் கணிக்க முடியாத வறண்ட மற்றும் வெப்பமான வானிலை குறித்து கருத்துரைத்தபோது அவர் இத்தகவலை வெளியிட்டார். தொடர்ந்து திசை மாறிக் கொண்டிருக்கும் சீரற்ற காற்று முறைகள் காரணமாக இந்த நிலையற்ற நிலைமை ஏற்பட்டதாக முகமட் ஹிஷாம் கூறினார்