
கோலாலாம்பூர், ஜூன்-9 – சிலாங்கூர் மந்திரி பெசாராக தாம் பதவியேற்க ஏதுவாக இடைத்தேர்தல் வரவிருப்பதாகக் கூறப்படுவதை, டத்தோ ஸ்ரீ தெங்கு சாஃவ்ருல் தெங்கு அப்துல் அசிஸ் மறுத்துள்ளார்.
அம்னோவிலிருந்து தாம் விலகிய முடிவில் இடைத் தேர்தல் என்ற ஒரு விவகாரம் வரவேயில்லை என, முதலீடு-வாணிபம் மற்றும் தொழில்துறை அமைச்சருமான அவர் சொன்னார்.
தமக்குத் தெரிந்து அப்படியொரு விவாதம் நடைபெறவும் இல்லை எனக் கூறிய தெங்கு சாஃவ்ருல், அவசியமில்லாமல் இடைத் தேர்தலை உருவாக்குவதை தாம் ஆதரிக்கவில்லை என்றார்.
அப்படியொன்று உருவானால் அது நேரத்திற்கும் மக்கள் வரிப் பணத்திற்கும் தான் விரயமென, இன்று வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறினார்.
தெங்கு சாஃவ்ருல் வகித்து வரும் செனட்டர் பதவியின் அதிகபட்ச பதவிக் காலமான ஆறாண்டுகள், இவ்வாண்டு இறுதியோடு முடிவடைவதால் அவர் அமைச்சர் பதவியைக் காலி செய்ய வேண்டும்.
இந்நிலையில், அவர் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு சிலாங்கூர் மந்திரி பெசாராக நியமிக்கப்படலாமென வதந்திகள் பரவியுள்ளன.
டத்தோ ஸ்ரீ ரஃபிசி ரம்லி, நிக் நஸ்மி இருவரும் அமைச்சர் பொறுப்புகளிலிருந்து விலகியுள்ளதால், அமைச்சரவையில் இரு இடங்கள் காலியாகி, அதில் ஓரிடத்தை நடப்பு சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி நிரப்பலாம் எனவும் பேசப்படுகிறது.
அமிருடின் வகித்து வரும் சுங்கை துவா சட்டமன்றத் தொகுதியே காலி செய்யப்பட்டு இடைத்தேர்தல் உருவாக்கப்படுமென வதந்திகள் கூறி வருகின்றன.