
கோலாலாம்பூர், ஜூன்-25 – A+, A, A- என எந்த வேறுபாடும் இல்லாமல் 10A தேர்ச்சிப் பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் மெட்ரிகுலேஷன் கல்லூரிகளில் நேரடி வாய்ப்புக் கிடைக்குமென பிரதமரே கூறியப் பிறகும், கல்வி அமைச்சர் அதற்குத் தடையாக இருப்பது ஏன்?
மலேசிய சீனர் சங்கமான மசீச-வின் தலைவர் டத்தோ ஸ்ரீ Dr வீ கா சியோங் அவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
A- பெற்றிருந்தால் மெட்ரிகுலேஷனில் நேரடி இடம் கிடைக்காது, ஆனால் அவர்கள் தாராளமாக விண்ணப்பிக்கலாமென, அமைச்சர் ஃபாட்லீனா சிடேக் நேற்று அறிவித்தது குறித்து, கா சியோங் அவ்வாறு கேட்டார்.
பிரதமரின் அறிவிப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்க் மத்தியில் நம்பிக்கையை விதைத்திருந்தது; இப்போது அதை தகர்க்கும் விதமாக அமைச்சின் செயல் அமைகிறது.
பிரதமரின் அறிவிப்பை மீறும் அளவுக்கு இந்த மெட்ரிகுலேஷன் விஷயத்தில் அப்படி என்னதான் நடக்கிறது என்பதும் புரியவில்லை.
அல்லது ஒருவேளை அமைச்சரவையே திரைமறைவில் இதற்கு ஆசி வழங்கி விட்டதா என கா சியோங் கேள்வி எழுப்பினார்.
கஷ்டப்பட்டு படித்து சிறப்புத் தேர்ச்சிப் பெற்று மெட்ரிகுலேஷன் கல்லூரிகளுக்கு நுழைய மாணவர்கள் ஆயத்தமான நேரத்தில், இப்படி ‘கோல் கம்பத்தை’ மாற்றி அவர்களின் நம்பிக்கையை சிதைப்பது நியாமல்ல.
வாக்குறுதி கொடுத்து விட்டால் அதனைக் கடைபிடிக்க வேண்டும்; இப்படி காற்றில் பறக்க விடக் கூடாது என்றார் அவர்.
SPM தேர்வில் 10A+ மற்றும் A நிலையில் தேர்ச்சிப் பெற்றவர்களுக்கே மெட்ரிகுலேஷன் கல்லூரிகளில் பயில நேரடி வாய்ப்புக் கிடைக்கும்.
என்றாலும், A- தேர்ச்சியைப் பெற்ற மாணவர்களும் மெட்ரிகுலேஷன் வகுப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்; அதற்கு எந்தத் தடையுமில்லை.
அவர்களின் விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்படும் என ஃபாட்லீனா நேற்று கூறியது மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.